Published : 09 Dec 2018 02:27 PM
Last Updated : 09 Dec 2018 02:27 PM

சர்கார் சர்ச்சை எதிரொலி:  பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ‘நோ அரசியல்’: சன் பிக்சர்ஸ் முடிவு

'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சால் சர்ச்சையானதால், 'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில் எவ்வித அரசியல் பேச்சும் கூடாது என்பதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக கவனமாக செயல்பட்டு வருகிறது. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 9) மாலை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதனை சன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் முடிவு செய்துள்ளது சன் பிச்கர்ஸ்.

முன்னதாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இவ்விழாவில் "தேர்தலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. நாங்க சர்கார் அமைத்து தேர்தலில் நிற்கப் போகிறோம். நான் படத்தைச் சொன்னேன். பிடித்திருந்தா படத்துக்கு ஓட்டு போடுங்க. நிஜத்தில் முதலமைச்சரானால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன் என்பதையே சொல்ல வருகிறேன்'" என்று பேசினார் விஜய்.

அடுத்த நாளே தமிழக அரசியல்வாதிகள் பலரும் விஜய்யின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஒரு சிலர் ஆதரவும் தெரிவித்தார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழாவிலே விஜய் பேசியது, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. படமும் பெரும் சர்ச்சைக்குப் பிறகு வெளியாகி, மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி வெற்றி பெற்றது.

தற்போது, இம்மாதிரியான எவ்வித பேச்சுகளுமே 'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில் இருக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ். இவ்விழாவில் கலந்து கொண்டு பேசவுள்ள அனைவருக்குமே இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழுக்க ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் வகையிலே இந்த இசை வெளியீட்டு விழாவினை வடிவமைத்துள்ளனர். அனிருத்தின் இசைக் கச்சேரி உள்ளிட்ட சில நிகழ்வுகளையும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

'பேட்ட' படத்திலுமே எவ்வித அரசியல் வசனமும் இல்லாமல், முழுக்க கமர்ஷியல் பாணியிலே திரைக்கதை அமைத்திருக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ். ஆகையால், 'சர்கார்' படத்தைப் போல எவ்வித பிரச்சினையிலும் சிக்காமல் வெளியாகிவிட வேண்டும் என்ற முனைப்பில்  காய் நகர்த்தி வருகிறது சன் பிக்சர்ஸ்.

சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் ரஜினியுடன்  'பேட்ட' படத்தில் நடித்துள்ளனர். இதில் நவாசுதீன் சித்தக்கியை தவிர மீதமுள்ள அனைவருமே இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. சுரேஷ் செல்வராஜ் கலை இயக்குநராக பணிபுரிந்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'பேட்ட' படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டதால், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ரஜினி. இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x