Published : 24 Nov 2018 12:53 PM
Last Updated : 24 Nov 2018 12:53 PM

‘பேட்ட’ வெளியீட்டு உரிமையில் ஏற்பட்ட சர்ச்சையும் விளக்கமும்

ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தின் வெளியீட்டு உரிமையில் நிலவிய சர்ச்சைக்கு, தயாரிப்பாளர் தாணு விளக்கம் அளித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கியுள்ளது. 2019 பொங்கல் வெளியீடு என்று அறிவித்துள்ளது.

இப்படத்தின் விளம்பரப் பணிகள் டிசம்பர் 3-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அன்றைய தினம் ஒரு பாடலும், டிசம்பர் 7-ம் தேதி ஒரு பாடலும், டிசம்பர் 9-ம் தேதி படத்தின் முழுமையான இசையும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

இந்நிலையில், இன்று (நவம்பர் 24) காலை முதல் ‘பேட்ட’ படத்தின் ஒட்டுமொத்த திரையரங்க வெளியீட்டு உரிமையையும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெரும் விலைக்கு கைப்பற்றியிருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், இதுவரை ரஜினி படங்களுக்கு கொடுக்கப்படாத விலை என்றும் கூறப்பட்டது. இதை, சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.

இச்செய்தி தொடர்பாக தாணுவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இப்படியொரு தகவல் எப்படிப் பரவுகிறது என்றே தெரியவில்லை. இதில் உண்மையில்லை. இன்னும் ‘பேட்ட’ தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டு வியாபாரம் தொடர்பாக எதுவும் தொடங்கவேயில்லை. அதற்குள் நான் படத்தின் உரிமையைக் கைப்பற்றிவிட்டேன் என தேவையில்லாமல் பரப்புகிறார்கள். இது படத்தின் வியாபாரத்தைப் பாதிக்கும். நான் அப்படத்தின் உரிமையை வாங்கவில்லை” என்று கோபத்துடன் குறிப்பிட்டார்.

‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, சசிகுமார், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்துள்ளனர். மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘பேட்ட’ படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுதான் அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x