Published : 22 Oct 2018 02:35 PM
Last Updated : 22 Oct 2018 02:35 PM

சூர்யா படத்துக்குப் பாட்டெழுதும் விக்னேஷ் சிவன்

சூர்யா நடித்துவரும் ‘என்.ஜி.கே.’ படத்துக்குப் பாடல் எழுதுவதாகத் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே.’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

ஜெகபதி பாபு, பாலா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, சூர்யா ரசிகர்களிடம் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டார் செல்வராகவன்.

அத்துடன், இந்தப் படத்துக்காக ஏற்கெனவே போட்ட ட்யூன்களை அழித்துவிட்டு, புதிதாக ட்யூன்கள் போடுவதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில், ‘என்.ஜி.கே.’ படத்துக்குப் பாடல் எழுதுவதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

“என்.ஜி.கே. படத்துக்கு ஒரு பாடல் எழுதியுள்ளேன். எல்லோருக்கும் பிடித்த ஜீனியஸ் இயக்குநரான செல்வராகவன் படத்துக்குப் பாட்டெழுதும் என் கனவு நனவாகியுள்ளது. அன்பான ரசிகர்களுக்கு நல்ல பாடல்கள் தயாராகி வருகின்றன” என ட்விட்டரில் நேற்று (அக்டோபர் 21) பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x