Published : 13 Oct 2018 07:57 PM
Last Updated : 13 Oct 2018 07:57 PM

கருணாநிதி முன்னிலையில் ‘அரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள்’ எனப் பேசியவர் அஜித்: கருணாஸ்

கருணாநிதி முன்னிலையிலேயே அரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள் எனப் பேசியவர் அஜித் என்று ‘பில்லா பாண்டி’ இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ் பேசினார்

ராஜ் சேதுபதி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பில்லா பாண்டி’. இப்படத்தில் அஜித் ரசிகராக நடித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். தீபாவளிக்கு ‘சர்கார்’ படத்துடன் இப்படமும் வெளியாகவுள்ளது.

‘பில்லா பாண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூரி, விவேக், கருணாஸ், சீமான், தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் கருணாஸ் பேசியதாவது:

நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு கலந்து கொள்ளும் சினிமா நிகழ்ச்சி இது. இந்த கலைவாணர் அரங்கத்தில் ஒரு முறையாவது மைக்கை பிடித்து பாடிவிட மாட்டோமோ என்று ஏங்கிய காலங்கள் உண்டு.

இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையவன் தான் இந்நிகழ்ச்சியின் ஹீரோ. நானும் இளையவனும் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள். வாழ்க்கையில் இந்த நிலைமைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று பொய் கூறமாட்டேன். பிறப்பும் இறப்பும் ஒரே முறைதான்.

அந்த வாழ்க்கை நாம் சார்ந்த நம் மொழிக்காகவும், நம் மண்ணுக்காகவும், நம் மக்களுக்காகவும் இருக்க வேண்டும். நம் அடையாளத்தை மறைத்து அடுத்த அடையாளத்தை தேட நினைப்பது போல ஒரு கேவலம் இல்லை. இதைத்தான் சீமானும் சொல்கிறார்.

என் தம்பி சூரி 20 வருடங்கள் கஷ்டப்பட்டு இப்போது மிகப் பெரிய காமெடியனாக வந்திருக்கிறான். நான் 9 ஆண்டுகளில் 130 படங்கள் நடித்தேன். நான் நடித்த 3வது படம் வில்லன். எண்ணங்கள் நன்றாக இருந்தால் அனைத்துமே நன்றாக நடக்கும். நான் யாருக்கும் எதிரானவன் கிடையாது. மனிதர்களை நேசிக்க கூடியவர்களில் நானும் ஒருவன்.

என்னை பின்னாலிருந்து ஸ்டாலின் இயக்குகிறார், டிடிவி இயக்குகிறார் என்று சொல்கிறார்கள். என்னை பசும்பொன் முத்துராமலிங்கம்தான் இயக்குகிறார். வேறு யாராலும் என்னை இயக்க முடியாது. நான் ஒன்றும் திருட்டுத்தனம் செய்தோ, பித்தலாட்டம் செய்தோ, ஜெயிலுக்கு செல்லவில்லை. இன்னும் 1000 கேஸ் போட்டாலும் நான் தாங்குவேன்.

அஜீத் பற்றி ஒன்று சொல்கிறேன். ஒருமுறை ஒரு சினிமா நிகழ்ச்சி நடந்தது. அதில் மேடையில் பேசும்போது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில் “எங்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு விருப்பம் இல்லை. அரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள்” என்று நேருக்கு நேராக சொன்னார். அவர் பேசும்போது ஒவ்வொருவராக யோசித்து யோசித்து கை தட்டினார்கள். ஆனால் அவர் பேசும்போதே எழுந்து கை தட்டியவன் இந்த கருணாஸ் மட்டும்தான்.

இவ்வாறு கருணாஸ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x