Published : 13 Oct 2018 10:31 AM
Last Updated : 13 Oct 2018 10:31 AM

‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்

‘தேவர் மகன் 2’ படத்தில் நடிக்கவிருப்பதை நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார் கமல்ஹாசன்.

கமலுடைய திரையுலகப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படங்களின் வரிசையில் ‘தேவர் மகன்’ கண்டிப்பாக இடம்பெறும். 1992-ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் சிவாஜி, கமல், கவுதமி, ரேவதி, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கமல் கதையும் எழுதி, அதனை தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலமாக தயாரித்தும் இருந்தார்.

சமீபமாக ‘தேவர் மகன் 2’வுக்காக கதையை கமல் எழுதி வருவதாக தகவல் வெளியானது. ஆனால், கமல் தரப்பிலிருந்து எதையுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் ‘மக்களுடனான பயணம்’ என்ற பெயரில் பல ஊர்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வருகிறார் கமல்.

இப்பயணத்தில் தற்போது நாமக்கல் மக்களை சந்தித்துப் பேசி வருகிறார். இதன் ஒரு பகுதியாக தனியார் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார் கமல். அப்போது தனது அரசியல் பயணம், அரசியல் பார்வை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் எடுத்துரைத்தார்.

அந்நிகழ்ச்சியில் 'திரையுலகப் பயணத்தில் அடுத்து’ என்ற கேள்விக்கு, “அடுத்த படம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்.‘தேவர் மகன் 2’, ‘இந்தியன் 2’ ஆகிய படங்கள் தான் பட்டியலில் உள்ளன. இதர வேலைகள் இருப்பதால் இப்படங்களை மட்டும்தான் ஏற்றுக் கொள்ள முடிந்தது. இரண்டுமே எப்போது வெளியாகும் என்று சொல்ல முடியாது. இரண்டில் ஒரு படத்துக்காக போடப்பட்டு இருக்கும் ஷெட்யூல் நீளமானது” என்று தெரிவித்திருக்கிறார் கமல்.

இதில் ‘இந்தியன் 2’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படப்பிடிப்புக்காக பல்வேறு நாடுகளுக்கு பயணித்து படப்பிடிப்புக்கான இடங்களை முடிவு செய்து வருகிறது படக்குழு. ‘இந்தியன் 2’ ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x