Published : 22 Sep 2018 05:18 PM
Last Updated : 22 Sep 2018 05:18 PM

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யாஷிகா, பாலாஜி வெளியேற்றம்?- காஜல் சூசக ட்வீட்

'பிக் பாஸ்' இந்த வாரம் எவிக்‌ஷன் ப்ராசஸில் வெளியேறும் இரண்டு பேர் யார் என்ற கேள்வி உள்ள நிலையில் பாலாஜியும், யாஷிகாவும் வெளியேறுகிறார்களா? எனும் பொருள்பட காஜல் சூசகமாக ட்வீட் செய்துள்ளார்.

'பிக் பாஸ் 2' நிகழ்ச்சியில்  இந்த வாரம் வெளியேறப்போகும் இரண்டுபேர் குறித்து போனவாரமே 'பிக் பாஸ்' அறிவித்து விட்டார். 'பிக் பாஸ்' 99-வது நாளைக் கடந்து செல்கிறது. இந்த முறை கூடுதலாக 6 நாட்களைச் சேர்த்து 106 நாட்களாக அறிவித்துள்ளனர். அதன்படி அடுத்த ஞாயிற்றுக்கிழமை 'பிக் பாஸ் சீசன் 2' முடிவடைகிறது.

பிக் பாஸில் இதுவரை நடந்த நிகழ்வுகளில் பலர் வெளியேற்றப்பட்டாலும் சென்றாயன் மற்றும் மும்தாஜ் வெளியேற்றம்தான் அதிகம் பிரச்சினைக்குள்ளானது. ஐஸ்வர்யா கடந்த பல வாரங்களாக மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து வந்தாலும் பிக்பாஸால் பல வகைகளில் சூட்சமமாகக் காப்பாற்றப்பட்டார்.

இதனால் நிகழ்ச்சியின் நெறியாளர் கமல் ஹாசனே கோபப்படும் நிலை உருவானது. நேர்மையற்ற முறையில் விளையாடி, அதை நியாயப்படுத்தி மற்றவர்களின் வெறுப்பை சம்பாதித்த ஐஸ்வர்யா பார்வையாளர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்தார். அவர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் நேர்மையாக விளையாடி அனைவரின் அன்பைப் பெற்றிருந்த வெள்ளந்தி மனிதர் சென்றாயன் வெளியேற்றப்பட்டதும் இது போங்காட்டம் என மக்கள் விமர்சித்தனர்.

போதாக்குறைக்கு கமலும் இதை கடுமையாக விமர்சித்தார். அடுத்த எவிக்‌ஷனுக்கு ஐஸ்வர்யா இருக்க வேண்டும் என்று கமல் கண்டிஷன் போட, அதைத் தட்ட முடியாமல் கூடவே மும்தாஜ், விஜயலட்சுமி உள்ளிட்டோர் வரும்படி 'பிக் பாஸ்' பார்த்துக்கொண்டார். கமலுக்கு தெரியாத ஒரு விஷயம் பிக்பாஸுக்குத் தெரியும்.

அதுதான் மக்கள் மனது. என்னதான் தவறு செய்தாலும் அதைவிடத் தவறு செய்தவரை ஹைலைட் செய்தால் முன்னர் தவறு செய்தவர் நல்லவராகி விடுவார். அவரை மேலும் நல்லவராக்க சில வேலைகள் செய்தால் முழுமையாக அந்த நபர் மீதான கோபம் மக்களுக்கு மறந்துவிடும். இதுதான் அரசியலில் இத்தனை ஆண்டுகள் நடக்கும் விவகாரம்.

இங்கு மக்கள் மனதில் ஒருவரை ஏற்றவும் இறக்கவும் ஊடகங்கள், வலைதளப் பிரச்சாரங்கள் என பல டெக்னிக்குக்கள் உண்டு. 'பிக் பாஸ்' வீட்டுக்குள் இருக்கவே இருக்கு டாஸ்க். பழைய போட்டியாளர்களை உள்ளே அனுப்பி ஐஸ்வர்யாவை குழந்தையாகக் காண்பிக்க வைத்தார்கள். காயத்ரியை விட்டு நேர்மையற்ற செயலைக்கூட யுக்தி என்று மாற்றிப் பேச வைத்தார்கள்.

கமல் என்னதான் கத்தினாலும் நேரடி ஓட்டிங்கில் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார், மேற்சொன்ன யுக்திகளால் மும்தாஜ் வெளியேற்றப்பட்டார். மும்தாஜ் வெளியேறியபோது திறமையான ஆட்டக்காரரான யாஷிகா அழுதார். காரணம் அவருக்கு சரி தவறு தெரியும்.

இந்த வாரம் ஆரம்பித்ததுமே 'பிக் பாஸ்' அனைவரும் எவிக்‌ஷனில் இருக்கிறீர்கள், வாக்கு அடிப்படையில் குறைவாக வாக்கு வாங்கும் இருவர் வெளியேற்றப்படுவீர்கள் என்று அறிவித்தார். நேரடிப் போட்டிக்கு தகுதிபெற்ற ஜனனியைத் தவிர அனைவரும் ரேஸில் உள்ளனர். 'பிக் பாஸ்' போட்டியில் தனது இருப்பு போதும் என்ற முடிவுக்கு பாலாஜி வந்துவிட்டார்.

வீட்டிலிருக்கும் ஒரே ஆண் போட்டியாளர் அவர். ஆனால் மற்ற பெண் போட்டியாளர்களிடம் போட்டியிட முடியாமல் தடுமாறி வருகிறார். ’பிக் பாஸ்’ வீட்டில் போட்டியாளரை வரிசைப்படுத்தும் முயற்சியில் அனைவரும் யாஷிகாவை முதல் நபராக ஏற்றுக்கொண்டனர். ஆனால் இரண்டாம், மூன்றாம் என அடுத்தடுத்த இடத்துக்குப் போட்டி இருந்தது, ஆனால் பாலாஜி தன்னைக் கடைசி இடத்தில் இருத்திக் கொண்டு மற்றவர்களைச் சமாதானப்படுத்தினார்.

பாலாஜி வெளியேறும் மனநிலைக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டார். கோபத்தைக் குறைத்துவிட்டார் பாலாஜி என்ற எண்ணமும் மக்களுக்கு வந்துவிட்டாலும் போட்டியாளராக அவரைப் பார்க்காததால் பாலாஜி வெளியேற்றப்படுவதாகத் தெரிகிறது. குறைந்த அளவு வாக்குகள் வாங்கியதில் பாலாஜி உள்ளார்.

அதேபோன்று யாஷிகா சிறந்த போட்டியாளராக இருந்தாலும் மகத்துடன் சேர்ந்தும், ஐஸ்வர்யாவுடன் சேர்ந்தும் அவர் ஆடிய ஆட்டத்தை மக்கள் மறக்கத் தயாராக இல்லை. பிக்பாஸும் அவரை நல்லவராக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கவில்லை. ஐஸ்வர்யா இந்த வாரம்கூட மற்ற போட்டியாளர்களுடன் மோதி அடம் பிடித்தார்.

அப்போதும்கூட யாஷிகா சரியாக விமர்சனம் செய்தார், ஐஸ்வர்யாவை அவர் தூண்டிவிடவில்லை. ஆனாலும் வாய்ப்பு வரும்போது மக்கள் இவரை விட நல்லவர்கள் என மற்ற போட்டியாளர்களுக்கு அதிக வாக்குகளை அள்ளி வீசியதால் யாஷிகாவும் பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை மெய்ப்பிக்கும் வகையில் முந்தைய 'பிக் பாஸ்' போட்டியாளர் காஜல் “என்ன பிக் பாஸ் வீட்டில் பாலாஜி, யாஷிகா இல்லையா? அப்படியானால் ஐஸ்வர்யாவுக்கு கை ஒடிந்தது போலிருக்குமே, அப்படியானால் ஐஸ்வர்யா வெல்வது கடினமாச்சே. என்ன ஐடியா பண்றாங்க” என்று பொருள்படும்படி ட்வீட் செய்துள்ளார்.

யாஷிகா, பாலாஜி வெளியேற்றப்பட்டால் ஐஸ்வர்யா இந்த வாரமும் தப்பிப்பார்.அடுத்த வாரம் மேலும் இருவர் வெளியேற்றபட்டு இறுதிப் போட்டியாளர் அறிவிக்கப்படுவார். பிக் பாஸின் பல தந்திரங்களை மீறி ஒரே ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்லலாம். இந்த முறை பிக்பாஸ்-2 வெற்றியாளர் ஒரு பெண் போட்டியாளர் என்பதே அது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x