Published : 21 Sep 2018 12:34 PM
Last Updated : 21 Sep 2018 12:34 PM

அடுத்த ஆண்டு ஜனவரியில் சிம்பு படத்தை வெளியிட திட்டம்?

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சிம்பு படத்தை வெளியிட, தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

சிம்பு நடிப்பில் அடுத்த வாரம் (செப்டம்பர் 27) ரிலீஸாக இருக்கும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அரவிந்த் சாமி, ஜோதிகா, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், அதிதி ராவ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிம்பு. பவன் கல்யாண் இயக்கத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அத்தரண்டிகி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமேக் இது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

பவன் கல்யாண் வேடத்தில் சிம்புவும், சமந்தா வேடத்தில் மேகா ஆகாஷும், நதியா வேடத்தில் குஷ்பூவும் நடிக்கின்றனர். பிரணிதா வேடத்தில் நடிப்பது யார் எனத் தெரியவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் தொடங்கியது.

முதலில் பாடல் காட்சிகளைப் படமாக்கிய பிறகு, சென்னையில் முக்கியக் காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர். தற்போது ஒரு பாடல் காட்சியைப் படமாக்கி முடித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு ஜனவரியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x