Published : 20 Sep 2018 04:44 PM
Last Updated : 20 Sep 2018 04:44 PM

‘சாமி ஸ்கொயர்’ படத்துக்குப் பிறகு சூர்யா படம்: உறுதிசெய்த இயக்குநர் ஹரி

‘சாமி ஸ்கொயர்’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் ஹரி.

ஹரி இயக்கத்தில் நாளை (செப்டம்பர் 21) ரிலீஸாக இருக்கும் படம் ‘சாமி ஸ்கொயர்’. விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, பாபி சிம்ஹா, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம், ஏற்கெனவே வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு, சூர்யாவை இயக்கப் போகிறார் ஹரி என்ற தகவல் வெளியானது. அதைத் தற்போது உறுதி செய்திருக்கிறார் ஹரி. ‘சாமி ஸ்கொயர்’ ரிலீஸுக்குப் பிறகு சூர்யா படத்தின் பணிகளை ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்துள்ள அவர், ஃபேமிலி சென்டிமென்ட், அதாவது ‘வேல்’ படத்தைப் போல இந்தப் படம் அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் 39வது படமாக இது அமையும். சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்துவரும் சூர்யா, இரண்டையும் முடித்த பிறகே ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

‘என்.ஜி.கே.’ படமானது, இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் முடியாததால் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x