Published : 20 Sep 2018 01:09 PM
Last Updated : 20 Sep 2018 01:09 PM

‘பிக் பாஸ்’: 4 போட்டியாளர்கள்... 4 மணி நேரம் ஒளிபரப்பு

‘பிக் பாஸ்’ இறுதிப்போட்டி, 4 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ, ‘பிக் பாஸ் 2’. கடந்த வருடம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் இது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சியில், ஜனனி, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், பாலாஜி, ரித்விகா, அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், சென்றாயன், டேனியல், மஹத், வைஷ்ணவி, மும்தாஜ், ஷாரிக் ஹாசன் ஆகியோர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். இடையில், விஜயலட்சுமியும் புதிய போட்டியாளராக ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் சென்றுள்ளார்.

அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், சென்றாயன், டேனியல், மஹத், வைஷ்ணவி, மும்தாஜ், ஷாரிக் ஹாசன் ஆகியோர் போட்டியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், ஜனனி, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், பாலாஜி, ரித்விகா, விஜயலட்சுமி ஆகிய 6 பேரும் போட்டியாளர்களாகக் களத்தில் உள்ளனர். இவர்களில், விஜயலட்சுமிக்கு இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. காரணம், போட்டியின் இடையில் சேர்ந்தவர் விஜயலட்சுமி. அவர் அதிக நாட்கள் இல்லாததால், இறுதிப்போட்டிக்கு அனுப்பப்பட மாட்டார் என்று தெரிகிறது.

எனவே, ஜனனி, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், பாலாஜி, ரித்விகா ஆகிய 5 பேரில், 4 பேர் இறுதிப்போட்டிக்குச் செல்ல, ஒருவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார். ஜனனி ஏற்கெனவே நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வான நிலையில், மற்ற மூன்று பேர் யாராக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள ‘பிக் பாஸ்’ ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

கடந்த சீஸனில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில், 4 போட்டியாளர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பது மிகப்பெரிய குறையாகச் சொல்லப்பட்டது. ஆனால், இந்த சீஸனில் அந்தக் குறையைத் தீர்த்துவைத்து விட்டார் ‘பிக் பாஸ்’. தற்போது இருக்கும் 6 போட்டியாளர்களில், பாலாஜி ஒருவர் மட்டுமே ஆண் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 17-ம் தேதி தொடங்கிய ‘பிக் பாஸ் 2’, மூன்றரை மாதங்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டப் போகிறது. வருகிற 30-ம் தேதி இறுதிப்போட்டி ஒளிபரப்பாக இருக்கிறது. ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது அன்று தெரிந்துவிடும். கடந்த முறை ஆரவ் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறுதிக்கட்டம் என்பதால், ‘பிக் பாஸ்’ வீட்டில் இருப்பவர்களுக்கும் சரி, அதைத் தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் சரி... வருத்தம் இருக்கத்தான் செய்யும். அந்த வருத்தத்தைக் கொண்டாட்டமாக மாற்றப் போகிறது விஜய் டிவி.

இறுதிப்போட்டிக்கு முந்தைய நாளான 29-ம் தேதி (சனிக்கிழமை), ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது விஜய் டிவி. சனிக்கிழமை மாலை 3 மணிக்குத் துவங்கும் இந்தக் கொண்டாட்டம், தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. வழக்கம்போல கடந்த சீஸன் போட்டியாளர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ ஒளிபரப்பானாலும், வழக்கமான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியும் சனிக்கிழமை ஒளிபரப்பாகும். வழக்கமாக 9 மணிக்குத் தொடங்கி 10.30 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, சனிக்கிழமை மட்டும் அரை மணி நேரம் கூடுதலாக, 11 மணி வரை ஒளிபரப்பாகும். ஆக, சனிக்கிழமை மட்டும் 6 மணி நேரம் ‘பிக் பாஸ்’ ஒளிபரப்பாக இருக்கிறது.

30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பாக இருக்கும் இறுதிப்போட்டியில், 4 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியும் 4 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இரவு 8 மணிக்குத் தொடங்கி, 12 மணி வரை ‘பிக் பாஸ்’ இறுதிப்போட்டி ஒளிபரப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x