Published : 19 Sep 2018 07:07 PM
Last Updated : 19 Sep 2018 07:07 PM

குணப்படுத்தவே முடியாத நோயால் பாதிக்கப்பட்ட குட்டி ரசிகரைச் சந்தித்த சூர்யா

தனது ஆதர்ச நடிகர்களைக் காண வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாக இருக்கும். அப்படிப்பட்ட கனவுதான் தினேஷுக்கும் இருந்தது.

ஆனால் அது சாதாரணக் கனவில்லை. தசைச் சிதைவு (இந்த நோய்க்கு சிகிச்சை செய்யலாம்; ஆனால் குணப்படுத்த முடியாது) என்னும் கொடும் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெருங்கனவு அது. தன் உடல் உறுப்புகளை மெல்ல மெல்லச் சிதைத்துவரும் நோயை எதிர்த்துப் போராடிக் கொண்டே, ஓவியத்திலும் சாதிக்கும் தினேஷின் வாழ்நாள் ஆசை அது.

சிறந்த ஓவியரான தினேஷ், தன்னுடைய கனவு நாயகன் சூர்யாவைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தேனியைச் சேர்ந்த தினேஷின் ஆசை தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.

அதைப் பார்த்த சூர்யா ரசிகர் மன்றத்தினர், சூர்யாவிடம் இதை எடுத்துச் சென்றானர். சிறுவன் தினேஷைப் பார்க்க விரும்பினார் சூர்யா.

தினேஷின் கனவு நனவானது. சூர்யா இன்று (புதன்கிழமை) சென்னையில் தினேஷைச் சந்தித்துப் பேசினார். சூர்யாவோடு அவரின் தந்தை சிவக்குமார் மற்றும் சகோதரர் கார்த்தியும் தினேஷைச் சந்தித்தனர்.

சிறுவனுக்குத் தன்னுடைய ஓவியத்தைப் பிரியத்துடன் பரிசளித்தார் சிவக்குமார்.

இதுதொடர்பாக ஒரு காணொலி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் தினேஷின் தந்தை, ''எப்பப் பார்த்தாலும் அண்ணனைப் (சூர்யா) பார்க்கணும், அண்ணனைப் பார்க்கணும்னு சொல்லிட்டே இருப்பான்'' என்று கூறுகிறார்.

தினேஷிடம் பேசிய சூர்யா, ''பார்த்தியா, உள்ளே அடிமனசுல என்ன நடக்கணும்னு நீ நினைச்சது இன்னிக்கு நடந்துருக்கு. என்னைப் பார்க்கணும்னு ஆசைப்பட்ட, பார்த்துட்ட. அடுத்து ஒரு பெரிய விஷயம் நடக்கணும்னு நினைச்சுட்டே இரு; கண்டிப்பா நடக்கும்'' என்று உத்வேகமூட்டுகிறார்.

மலர்ந்து சிரிக்கிறார் தினேஷ். அவரின் அடுத்தடுத்த கனவுகளும் நிஜமாகட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x