Published : 18 Sep 2018 04:13 PM
Last Updated : 18 Sep 2018 04:13 PM

விஜய் டிவியின் புதிய சீரியல் ‘அரண்மனை கிளி’: ‘பிக் பாஸ் 2’ நேரத்தில் ஒளிபரப்பாகிறது!

‘அரண்மனை கிளி’ என்ற புதிய சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

பழைய சீரியல்கள் சில முடிந்துவிட்ட நிலையில், புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வரிசையில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியல் ‘அரண்மனை கிளி’. ராஜ்கிரண், மீனா நடிப்பில் 1993-ம் ஆண்டு ரிலீஸான படத்தின் பெயர் இது.

சீரியல் நாயகியான ஜானு, ரொம்பவே வெகுளிப் பெண். பணக்கார வீட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அர்ஜுன். ஜானு - அர்ஜுன் இருவரின் முதல் சந்திப்பே கசப்பாக அமைந்ததால், ஜானுவை அர்ஜுனுக்கு அறவே பிடிக்காது. ஆனால், சூழ்நிலை காரணமாக அர்ஜுன் - ஜானுவுக்குத் திருமணம் நடந்து விடுகிறது.

அர்ஜுனின் அம்மா மீனாட்சி, மிகப்பெரிய தொழிலதிபர். தன் மகனுக்குப் பிடித்த பெண்ணைத்தான் அவனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது அவருடைய கனவு. ஆனால், சூழ்நிலை ஜானுவைத் திருமணம் செய்துவைக்குமாறு ஆக்கிவிடுகிறது.

அர்ஜுன், அவன் தாய் மீனாட்சி இருவருக்குமே ஜானுவை சுத்தமாகப் பிடிக்காத நிலையில், அந்த வீட்டுக்கு வாழ வருகிறாள் ஜானு. எல்லோருடைய வெறுப்புகளையும் மீறி, அந்த வீட்டிலுள்ளவர்களில் மனதில் ஜானு இடம்பிடிப்பாளா? என்பதுதான் ‘அரண்மனை கிளி’ சீரியலின் கதை.

அர்ஜுனாக கன்னட சீரியல் நடிகர் தர்ஷனும், ஜானுவாக மோனிஷாவும், மீனாட்சியாக நடிகை பிரகதியும் நடிக்கின்றனர். இந்த சீரியலில் வில்லியாக நீலிமா நடிக்கிறார். அணில் இயக்கியுள்ள இந்த சீரியலுக்கு, ஜான்சன் இசையமைத்துள்ளார்.

வருகிற 24-ம் தேதி முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ‘அரண்மனை கிளி’ சீரியல் ஒளிபரப்பாகிறது. இதுவரை ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பாகி வந்த நேரத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x