Published : 11 Sep 2018 05:49 PM
Last Updated : 11 Sep 2018 05:49 PM

ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு

ஜோதிகா நடிக்க இருக்கும் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘நாச்சியார்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அவர் நடிப்பில் ‘செக்கச்சிவந்த வானம்’ மற்றும் ‘காற்றின் மொழி’ ஆகிய படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.

மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில், அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஜோதிகா. படத்தில் அவருடைய கேரக்டர் பெயர், சித்ரா.

சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வருகிற 27-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

அத்துடன், ‘மொழி’ படத்துக்குப் பிறகு ராதாமோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்துள்ளார். இந்தியில் வித்யா பாலன் நடித்து சூப்பர் ஹிட்டான ‘தும்ஹரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக் இது. இந்தப் படத்தில் ஜோதிகாவின் கணவராக விதார்த் நடித்துள்ளார். ஆர்.ஜே.வாக ஜோதிகா நடித்திருக்கும் இந்தப் படம், அவருடைய பிறந்த நாளான அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், அவருடைய அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சூர்யாவின் ‘என்.ஜி.கே.’ படத்தைத் தயாரித்துவரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை, எஸ்.ராஜ் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர், இயக்குநர் கார்த்திக் ராஜுவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

படத்தின் தலைப்பு, மற்ற நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. அடுத்த மாதம் (செப்டம்பர்) இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x