Published : 24 Aug 2018 05:43 PM
Last Updated : 24 Aug 2018 05:43 PM
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனும் மக்களின் சினிமாவைக் கொண்டாடுவோம் என இயக்குநர் பா.இரஞ்சித் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
லெனின் பாரதி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. ஏலக்காய்த் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய இந்தப் படத்தில், புதுமுகங்கள் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.
பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ள இந்தப் படம், விருதுகளையும் பெற்றுள்ளது. படத்தைப் பார்த்த அனைவருமே கொண்டாடி வருகின்றனர். ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனும் மக்களின் சினிமாவைக் கொண்டாடுவோம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.
“போலித்தனம் அல்லாத எளிமை மிக்க வாழ்க்கையை நிலத்தோடும் காற்றோடும் மொழியோடும், அதிகாரத்தால் சுரண்டப்படுகிற மனித முகங்களின் சுருக்கத்தில் வழிந்தோடும் எளிமையின் பேரனுபவத்தை ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனும் மக்களின் சினிமாவில் கொடுத்த இயக்குநர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், தயாரிப்பாளர் விஜய் சேதுபதி மற்றும் இத்திரைப்படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் பெரும் பாராட்டுகளும், பெரும் மகிழ்ச்சியும்.
எப்போதும் நல்ல தரமான சினிமாவை ஊக்குவிக்கும் அன்பிற்கினிய தமிழ்த் திரைப்பட ரசிகர்களே... வாருங்கள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனும் மக்களின் சினிமாவைக் கொண்டாடுவோம். மகிழ்ச்சி” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பா.இரஞ்சித்.
இன்னொரு ட்வீட்டில், “எளிதில் நெருங்கிட முடியவே முடியாத எளிமையை, அனாசயமாகக் கலை எனும் பேரனுபவத்தைத் திரைவழியே கடத்திய இயக்குநர் லெனின் பாரதி & இசைவழியே உணர்வுகளைச் சிலுப்பிய முன்னத்தி ஏர் இளையராஜா. நன்றியும் மகிழ்ச்சியும். ஆம், எளிமைக் காட்சிப்படுத்துதல் என்பது ஆகப்பெரும் போர்” என்று தெரிவித்துள்ளார் பா.இரஞ்சித்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT