Published : 19 Aug 2018 05:19 PM
Last Updated : 19 Aug 2018 05:19 PM

வைரமுத்துவை கண்டு வாயடைத்துப் போனார் இளையராஜா: இயக்குநர் பாரதிராஜா

வைரமுத்துவை கண்டு வாயடைத்துப் போனார் இளையராஜா என்று ‘ஓம்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ’ஓம்’. இதில் பாரதிராஜாவே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பாக்யராஜ், அமீர், கரு.பழனியப்பன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய வைரமுத்து குறித்து பேசிய இயக்குனர் பாராதிராஜா “வைரமுத்து  முதன்முதலில் என்னை சந்திக்க வருகிறார். அப்போது என்னிடம் ஒரு புத்தகத்தை நீட்டி இது நான் எழுதிய கவிதை. உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். அந்த திமிர்தான் எனக்கு பிடித்திருந்தது.

அதை படித்து விட்டு மீண்டும் ஒரு நாள் அவரை அழைத்தேன். அப்போது உடனிருந்த இளையராஜா, தன்னுடைய டியூனுக்கு ஏற்ப பாடல் எழுதித் தருமாறு கேட்டார்.

சற்று நேரம் வெளியே சென்ற வைரமுத்து ஒரு பேப்பரோடு உள்ளே நுழைந்தார். பேப்பரை வாங்கி படிக்க தொடங்கிய இளையராஜா என்னை தனியே அழைத்து சென்று எங்கிருந்து இவனை பிடித்தாய். சினிமாவில் இருக்கும் பெரிய பெரிய யானைகளை எல்லாம் சாய்த்து விடுவான் இவன் என்று என்னிடம் கூறினார். அந்த பாடல்தான் இது ஒரு பொன்மாலை பொழுது.”

இவ்வாறு பாரதிராஜா பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x