Published : 18 Aug 2018 08:16 PM
Last Updated : 18 Aug 2018 08:16 PM
கேரள வெள்ளப் பாதிப்புக்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் விஷால்.
கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்து வருகிறது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தால், ரூ.19 ஆயிரத்து 512 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, இதுவரை 680 கோடி ரூபாயை வெள்ள நிவாரணமாக வழங்கியுள்ளது. மேலும், முதல்வரின் நிவாரண நிதிக்கும் பல்வேறு இடங்களில் இருந்தும் நிதியுதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. சினிமா பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவியை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என விஷால் பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “மதிப்பிற்குரிய பிரதமரே, கேரள வெள்ளப் பாதிப்பை, தேசியப் பேரிடராக உடனே அறிவிக்கும்படி வேண்டுகிறேன். மேலும், நிவாரண நிதியையும் அதிகமாக வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நம் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் செயல்படுத்தத் தேவையான உதவிகளை வழங்குங்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஷால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT