Published : 18 Aug 2018 09:32 AM
Last Updated : 18 Aug 2018 09:32 AM

பொண்ணுக்கு தங்க மனசு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர் ‘சரவணன் மீனாட்சி’. இது தற்போது முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற புதிய தொடர் வரும் திங்கள்கிழமை முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இத்தொடர், கேரளாவில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஸ்திரீதனம்’ எனும் தொடரை தழுவி எடுக்கப்படுகிறது. இது அங்கு 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய தொடராகும்.

திருமண வாழ்க்கையில் வரதட்சணையும், பணமும் எவ்வளவு பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி இத்தொடர் அமைகிறது. திவ்யா என்னும் நடுத்தர குடும்பத்துப் பெண், பிரசாந்த் என்ற பணக்கார வீட்டு பையனை விரும்புகிறாள். அந்த பணக்கார வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் திவ்யாவின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் தொடர்.

பிரசாந்தின் தாயான சேதுலட்சுமி, பணம்தான் வாழ்க்கை என்று வாழ்பவர். தன் மகனை ஒரு பணக்கார பெண்ணுக்குதான் கட்டித் தரவேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். அதனால் திவ்யா போன்ற நடுத்தர வீட்டு பெண் மற்றும் அவள் மூலமாக வரும் வரதட்சணையில் அவருக்கு திருப்தி இல்லை. அதையே காரணமாகக் கொண்டு மருமகளை வெறுக்கிறார். அவளையும் அவளது குடும்பத்தையும் அவமானப்படுத்துகிறார். இதற்கெல்லாம் நடுவில், திவ்யாவுக்கு ஆறுதலாக இருக்கிறான் அவளது அன்புக் கணவன் பிரசாந்த்.

மலையாள தொலைக்காட்சி நடிகை ராதிகா, திவ்யாவாக நடிக்கிறார். இத்தொடர் மூலம் அவர் தமிழ் தொலைக்காட்சிக்கு அறிமுகமாகிறார். நடிகர் அஸ்வின், பிரசாந்தாக நடிக்கிறார். இத்தொடரின் முக்கிய கதாபாத்திரமான சேதுலட்சுமியாக நடிகை சிரிஷா நடிக்கிறார். ஹாரிசன் இயக்கும் இத்தொடருக்கு மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x