Published : 31 Jul 2018 09:44 PM
Last Updated : 31 Jul 2018 09:44 PM

“கருணாநிதி குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லத்தான் என்னால் முடியும்” - ரஜினிகாந்த்

‘கருணாநிதி குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லத்தான் என்னால் முடியும்’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரான மு.கருணாநிதி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பல்வேறு அரசியல் கட்சித்  தலைவர்களும் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்துச் செல்கின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, இன்று மாலை மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். மேலும், பல தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். ஏராளமான திமுக தொண்டர்களும் மருத்துவமனை முன்னால் கூடியுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இரவு 8.45 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கிருந்த கருணாநிதி குடும்பத்தினரிடம் அவருடைய உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்திய அரசியலில் மூத்த தலைவரான கருணாநிதியின் நலனை விசாரிக்க வந்தேன். அழகிரி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் அங்கு இருந்தனர். அவர்களுக்கு நான் ஆறுதல் சொன்னேன். அவ்வளவு தான் என்னால் செய்ய முடியும்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர் தூங்கிக் கொண்டிருந்ததால் என்னால் பார்க்க முடியவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x