Last Updated : 20 Jul, 2018 03:15 PM

 

Published : 20 Jul 2018 03:15 PM
Last Updated : 20 Jul 2018 03:15 PM

சூர்யா - கே.வி.ஆனந்த் படத்திலிருந்து விலகியது ஏன்? - அல்லு சிரிஷ் விளக்கம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திலிருந்து விலகியது ஏன் என்று அல்லு சிரிஷ் விளக்கமளித்திருக்கிறார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை லண்டனில் முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளது படக்குழு. மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, சயிஷா உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது இப்படத்திலிருந்து அவர் விலகியிருக்கிறார்.

இதற்கு அல்லு சிரிஷ் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

''நான் சூர்யாவின் 37-வது படத்தில் நடிக்க இருந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், இப்படத்திற்கான தேதிகள் நான் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ள ‘ஏபிசிடி’ படத்துடன் முரண்படுகிறது. மேலும் இதற்கான படப்பிடிப்பு தேதிகளை மீண்டும் திட்டமிட முடியாது. அதன் காரணமாக  நானாக முன் வந்து சூர்யா படத்திலிருந்து விலகுகிறேன்.

இயக்குநர் கே.வி. ஆனந்த் என் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளார். நான் இந்தப் படத்தில் நடிக்க இருந்ததை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இப்போது அது முடியாமல் அப்படத்திலிருந்து விலக வேண்டியதாகிவிட்டது.

இந்தப் படத்திற்கு  வாய்ப்பு அளித்தற்காக  நடிகர் சூர்யா, இயக்குநர் கே. வி. ஆனந்த், லைகா தயாரிப்பு நிறுவனம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படக் குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். எதிர்காலத்தில் இந்த அற்புதமான குழுவுடன் பணிபுரிவேன் என்று நம்புகிறேன்.''

இவ்வாறு அல்லு சிரிஷ் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x