Last Updated : 19 Jul, 2018 07:00 PM

 

Published : 19 Jul 2018 07:00 PM
Last Updated : 19 Jul 2018 07:00 PM

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: எடிட்டர் ஆண்டனி கடும் சாடல்

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக எடிட்டர் ஆண்டனி கடுமையாகச் சாடியிருக்கிறார்.

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்த முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்செய்தி தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய கடும் கண்டனத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எடிட்டர் ஆண்டனி கூறியிருப்பதாவது:

''ஒரு நிமிடம் எனது கருத்தினால் எதையும் பதிவிடமுடியாமல் முடக்கப்பட்டு விட்டதாக நினைத்தேன். ஆம், பாதிக்கப்பட்ட பெண் என் குடியிருப்பில் வசிப்பவர் தான். இதுபோன்ற விஷயங்கள் இன்னும் நடப்பது வருத்தமாக இருக்கிறது.

இது குறித்து அரசாங்கம் என்ன செய்கிறது? ஒன்றுமில்லை. அவர்களுக்கு வண்ணமான ரூபாய் நோட்டுகள் பற்றியும், டிஜிட்டல் இந்தியா பற்றியும் தான் கவலை. எனக்கு என் தேசத்தைப் பிடிக்கும். சந்தேகமேயில்லை. ஆனால் பாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் போது அதையும் மாற்றத்தான் வேண்டும்.

13 வயதுக்குக் கீழ் இருக்கும் பெண்ணோ, 60 வயதுக்கு மேல் இருக்கும் பெண்ணோ, யாரை பலாத்காரம் செய்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அந்த பயத்தைக் கொண்டு வாருங்கள். அவனைத் துடிக்க வைத்து பின் நடுரோட்டில் கொல்லுங்கள்.''

இவ்வாறு ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x