Published : 17 Jul 2018 05:19 PM
Last Updated : 17 Jul 2018 05:19 PM

25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி

25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சீதக்காதி’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதிபதியுடன் அவர் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. 80 வயது நாடகக் கலைஞரான அய்யா மற்றும் அவருடைய மகன் குமார் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

அய்யா வேடத்துக்கு ஜோடியாக அர்ச்சனாவும், குமார் வேடத்துக்கு ஜோடியாக பார்வதி மற்றும் காயத்ரியும் நடித்துள்ளனர். இயக்குநர் மகேந்திரன், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அய்யா வேடத்துக்காக விஜய் சேதுபதிக்கு எப்படி மேக்கப் போடப்பட்டது என்ற மேக்கிங் வீடியோ ‘சூப்பர் சிங்கர் 6’ இறுதிப்போட்டியில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். “சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற லெஜண்ட் நடிகர்களுக்குப் பொருத்தமான படம் இது. சில பெரிய நடிகர்களைத்தான் இதில் நடிக்கவைக்க நினைத்திருந்தார் பாலாஜி தரணீதரன். ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியாததால், வேறு வழியில்லாமல் என்னை நடிக்க வைத்தார். இந்தப் படத்திற்குத் தேவையானதைச் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

‘சீதக்காதி’ ஒரு ஆத்மார்த்தமான படம். கலைக்கு முடிவே இல்லை, சாகாவரம் பெற்றது என்பதை உணர்த்தும் படம். யாரோ ஒருவரின் மூலம் எப்படியாவது வாழும். என் 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்ததை என் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x