Last Updated : 25 Jun, 2018 07:48 PM

 

Published : 25 Jun 2018 07:48 PM
Last Updated : 25 Jun 2018 07:48 PM

பிக் பாஸ் 2: நாள் 7- சாண்ட்விச் திருடியது யார்?

போன சீஸனில் முட்டை காணாமல் போன பஞ்சாயத்து போலவே சாண்ட்விச் காணாமல் போன பிரச்சனையோடு நேற்றைய பிக் பாஸ் தொடங்கியது.

வீட்டில் இருக்கும் 16 பேருக்கும் ஆளுக்கு ஒரு சாண்ட்விச் வீதம் 16 சாண்ட்விச்கள் குக்கிங் டீமால் தயாரிக்கப்பட்டது. ஆனால் வீட்டில் இருந்த யாரோ ஒருவர் மும்தாஜ் மற்றும் மமதிக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த சாண்ட்விச்களை எடுத்து சாப்பிட்டு விட்டார்கள்.

சமையல் விஷயத்தில் கறாராக இருக்கும் மும்தாஜ் வழக்கம் போல இந்த பிரச்சனையிலும் பயங்கர கடுப்பாகிப் போனார். “நான் குக்கிங் டீம்.. எனக்கு இல்லன்னாலும் பரவாயில்ல.. அடுத்தவங்க சாண்ட்விச்சை எப்படி எடுத்து சாப்பிடலாம்” என்று கடுமையான தொனியில் புலம்பிக் கொண்டிருந்தார்.

அதை ஆமோதித்து வைஷ்ணவியும் “டீசண்ட் இல்லாதவங்கதான் இப்படி எடுப்பாங்க” என்று சொல்ல அதை ஆட்சேபிக்கும் வகையில் அனந்த் வைத்தியநாதன் “இவ்ளோ ஹார்ஷான வார்த்தைகள் உபயோகிக்க வேண்டாம்.. கேட்டால் வருத்தப்படுவார்கள்” என்று கூறினார்.

வீட்டில உள்ள அனைவரும் மீண்டும் மீண்டும் இதை பற்றியே பேச ”யாராவது பசியில் எடுத்து சாப்பிட்டு இருப்பாங்க” என்று கூறி பிரச்சனையை முடித்து வைத்தார் மஹத்.

சிறிது நேரத்தில் அகம் டிவியில் தோன்றிய கமல் இந்த வாரம் நடந்த முக்கிய நிகழ்வுகளில் frozen framesகளை காட்டி அதற்கான காரணங்களை கேட்டார்.

முதலில் பொன்னம்பலம் ஹாயாக சோபாவில் படுத்து தூங்கிய படம். அதை திரையில் காட்டியதுமே வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாது அரங்கில் இருந்த பார்வையாளர்களும் வெடிச் சிரிப்பு சிரித்தனர். ஏற்கெனவே இணையத்தில் மீம்ஸ் வடிவில் அந்த படம் வலம் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்தாஜுக்கும் நித்யாவுக்கும் நடந்த வெங்காய சண்டையில் வீடே அதகளப்பட்ட போது எதற்குமே சம்மந்தம் இல்லாதது போல பொன்னம்பலம் மட்டும் ஜாலியாக சோபாவில் படுத்திருந்த போது எடுத்த படமே அது.

அதன் பிறகு சென்றாயன் தலையில் குடுமி போட்ட படம், மஹத் உடன் இரு புறமும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா நடந்து செல்லும் படமும், ஹைலைட்டாக ஜட்டி.. சாரி பெட்டி வந்த சந்தோசத்தில் டேனியல் கூச்சல் போட்ட படங்களை காட்டி அதற்கான காரணங்களை கலகலப்புடன் கேட்டறிந்தார் கமல்.

அடுத்து டெனியலிடம் வீட்டில் உள்ள அனைவருக்கும் வைக்கப்பட்ட பட்டப்பெயர்கள் குறித்து கேட்டார் கமல். உடனே ஆர்வத்துடன் எழுத டேனியல் அனைவரின் பெயர்களை பட்டியலிடத் தொடங்கினார்.

ஷாரிக் - மாவுமிஷின்

பாலாஜி - டல்கோ

மமதி - நைட்டிங்கேல்

ரித்விகா - மண்டகசாயம்

நித்யா- ஃபீலிங்க்ஸ் பறவை

அனந்த் - இசை

ஜனனி - விஷபாட்டில்

யாஷிகா- தலைவலி மாத்திரை

ஐஸ்வர்யா - ஆமவடை

வைஷ்ணவி - டமார் ஜோக்

ரம்யா - சூனியக்கிழவி 

மஹத் - வெங்காய வெட்டி

சென்றாயனுக்கும் மும்தாஜுக்கும் இன்னும் பெயர் வைக்கவில்லை.

இவை அனைத்தையும் மிகவும் ரசித்து கெட்டுக் கொண்டிருந்த கமல் பின்னர் ஐஸ்வர்யாவை பாட சொன்னார். ’சதிலீலாவதி’ படத்தின் ’மாருகோ மாருகோ’ பாடலை ஒரு குழந்தையைப் போல பாடி முடித்தார் ஐஸ்வர்யா. பின்னர் அதே பாடலை கமலும் பாடிக் காட்டினார்.

இடைவேளை விட்டு கமல் சென்றதும் டேனியலிடம் “என் தொழிலை வைத்து என்னை கிண்டல் செய்யாதே” என்று கண்டிப்புடன் சொன்னார் அனந்த். பிறகு டேனியல் கேமரா முன்பு சென்று தான் பேசியதை எடிட் செய்து விடுமாறு பிக் பாஸிடம் கோரிக்கை வைத்தார்.

மீண்டும் அகம் டிவி வழியே வந்த கமல் இப்பொது ஒவ்வொரு அடைமொழிகளை கூறி அது யாருக்கு பொருந்தும் என்று ஒவ்வொரிடமும் கேட்டார். அதன்படி முதலில் ’நாட்டாமை’ என்ற வார்த்தைக்கு ஜனனியை சிலரும், பொன்னம்பலத்தை சிலரும், மும்தாஜை சென்றாயனும், பாலாஜி நித்யாவையும் கூறினார்கள்.

பிறகு காதல் மன்னன் என்ற வார்த்தைக்கு ஷாரிக் தன்னையே தெர்ந்தெடுக்க அதை கேட்ட கமல் “ஆஹா இதுவல்லவோ தன்னடக்கம்” என்று கிண்டலடித்தார். சிலர் மஹத்துக்கு அந்த பட்டத்தை கொடுத்தார்கள். மமதி மட்டும் தனி ரூட்டில் “நீங்கதான் சார் எப்பொதும் காதல் மன்னன்” என்று கூற மற்றவர்களும் அதை அமோதித்தனர்.  அதை கேட்ட கமல் சிரித்துக் கொண்டே “அந்த பட்டம் என்கிட்ட இருந்து போய் பல நாள் ஆச்சு” என்று கூறினார்.

”டேனியல் தான் உண்மையான காதல் மன்னன். அவன் தன் காதலியை நினைத்துக் கொண்டிருக்கிறான்” என்று மஹத் டேனியலை கோர்த்து விட கமல் டேனியலின் “ஃப்ரெண்டு.. லவ் மேட்டரு..” வசனத்தை அதே பாணியில் பேசிக் காட்ட கலகலப்பானது மேடை.

கடைசியாக நாரதர் என்ற பட்டத்துக்கு அனைவரும் ஒன்று சேர்ந்தார் போல மாற்றுக் கருத்தின்றி ஜனனியை தெர்வு செய்ய அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் கமல் நடித்த படங்களிலிருந்து சில காட்சிகளை வீட்டில் உள்ளவர்கள் நடித்துக் காட்ட அதை ரசித்து பார்த்தார் கமல்.

சந்தோசமாக இருந்த பங்கேற்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் எலிமினேஷனை நினைவுபடுத்தினார். போன வாரமே எலிமினேஷன் இல்லை என்று அறிவித்து விட்டாலும் எலிமினேஷன் பட்டியலில் இருந்த அனந்த், நித்யா, மும்தாஜ், ரித்விகா ஆகியோரை எழுப்பி அவர்கள் இந்த பட்டியலில் வந்ததற்கான காரணங்களை பகிரச் சொன்னார்.

நால்வரும் தங்களுக்கான காரணங்களை சொன்ன பிறகு மும்தாஜை தவிர அனைவரையும் அமர சொன்னார் கமல். உடனே கலவரமான மற்றவர்கள் அனைவரும் எழுந்து மும்தாஜை அனுப்ப வேண்டாம் என்று கொரிக்கை வைத்தார்கள். விடாப்பிடியாக கமல் இந்த வார பலிகடா மும்தாஜ்தான் என்பது போன்ற சூழலை உருவாக்கி போட்டியாளர்களுக்கு மேலும் டென்ஷனை ஏற்றினார்.

பின்னர் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதை கமல் அறிவிக்கவும் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்து விடைபெற்ற கமல் பார்வையாளர்களை நோக்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த வாரம் விஸ்வரூபம் படத்தின் ஒரு பாடல் பிக் பாஸ் மேடையில் வெளியிடப்படும் என்பதுதான் அது.

(தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x