Published : 23 Jun 2018 01:18 PM
Last Updated : 23 Jun 2018 01:18 PM

சூர்யா ஜோடியாக நடிக்கிறார் ‘வனமகன்’ சயிஷா

‘வனமகன்’ படத்தில் நடித்த சயிஷா, கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார்.

‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சயிஷா சைகல். மும்பையைச் சேர்ந்த இவர், பிரபல இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி. ‘அகில்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், அடுத்து அஜய் தேவ்கனுடன் ‘ஷிவாய்’ படத்தில் நடித்தார். நடனத்தில் தேர்ச்சி பெற்றவர் சயிஷா என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ‘வனமகன்’ படத்தில் இவர் ஆடிய நடனத்தைப் பார்த்து, இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவரும் சயிஷா, ‘வனமகன்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி ஜோடியாக ‘ஜுங்கா’ படத்திலும், கார்த்தி ஜோடியாக ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும், ஆர்யா ஜோடியாக ‘கஜினிகாந்த்’ படத்திலும் நடித்துள்ளார். இதில், ‘கஜினிகாந்த்’ படம் மத்திய தணிக்கை வாரிய அதிகாரிகளிடம் இருந்து ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. எனவே, இந்தப் படம்தான் முதலில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்க இருக்கும் புதிய படத்தில், சூர்யா ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் சயிஷா. மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில், பிரபல இந்தி நடிகர் பொமன் இரானி மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இதில் இணைந்துள்ளனர். பொமன் இரானிக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படமாக இருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், லண்டனில் தொடங்க இருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்ததும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x