Published : 05 Feb 2018 05:40 PM
Last Updated : 05 Feb 2018 05:40 PM
பாலா இயக்கவுள்ள 'வர்மா' படத்திற்கு ராஜுமுருகன் வசனங்கள் எழுதி வருகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாச்சியார்' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவுற்று, பிப்ரவரி 16-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
'நாச்சியார்' படத்தைத் தொடர்ந்து, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' படத்தை இயக்கவுள்ளார். இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகனாக விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் நாயகி மற்றும் இதர நடிகர் - நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு வசனம் எழுதும் பணியை இயக்குநர் ராஜுமுருகன் மேற்கொண்டு வருகிறார். 'குக்கூ' மற்றும் 'ஜோக்கர்' படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ராஜுமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் முதல் 'வர்மா' படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.
சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'அர்ஜுன் ரெட்டி'. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இப்படம் தமிழில் 'வர்மா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT