Last Updated : 13 Oct, 2017 01:56 PM

 

Published : 13 Oct 2017 01:56 PM
Last Updated : 13 Oct 2017 01:56 PM

தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு: திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பு

திரையரங்க கட்டணம் தொடர்பாக 7 புதிய விதிமுறைகளை தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த சில நாட்களாக கேளிக்கை வரிக் குறைப்பு, திரையரங்கு டிக்கெட் கட்டணம் தொடர்பாக தமிழக அரசுடன் தமிழ்த் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்கு இன்று (அக்டோபர் 13) நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் திரையரங்குகளுக்கு புதிய 7 விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். அந்த அறிவிப்புகள் பின்வருமாறு:

1.இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது:

2.இன்றுமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்

3.கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்

4.அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்

5.தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்

6.பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது

7.விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்

இந்த திடீர் அறிவிப்புக்கு, திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் இச்செய்தியை பகிர்ந்து விஷாலுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

திருட்டு விசிடியை ஒழித்து, மக்களை திரையரங்கிற்கு வந்து படம் பார்க்க வைக்கும் முயற்சியே இது. டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம் என பல வகைகளில் வசூலிக்கப்படுவதை ஒருங்கிணைக்கவே இந்த அறிவிப்பு என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தெரிவித்தார்கள்.

மேலும், திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் விஷாலின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x