Published : 08 Nov 2016 05:34 PM
Last Updated : 08 Nov 2016 05:34 PM
நவம்பர் 27-ம் தேதி பொதுக்குழுவில் விவாதிக்கப் போகும் திட்டங்கள் என்ன என்பதை தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நவம்பர் 27-ம் தேதி சென்னையில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார். செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துகிறார். மேலும், துணைத்தலைவர் கருணாஸ் 2015-2016 ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை பொதுக்குழு கூட்டத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறுகிறார்.
பொருளாளர் கார்த்தி சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டங்களைப் பற்றி விளக்கமளிக்கிறார். மேலும், செயலாளர் விஷால் கடந்த கால நிர்வாக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பொது குழுவில் ஒப்புதல் கோரவுள்ளார். தலைவர் நாசர், தற்போதைய நாடகங்களின் நிலை குறித்தும் அவற்றின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் விளக்கமளிக்கிறார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் பொற்கிழி , தமிழ் சினிமா நூற்றாண்டு விழா விருது மற்றும் பொற்கிழி, ஆச்சி மனோரமா விருது மற்றும் பொற்கிழி போன்றவைகள் வழங்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
துணைத்தலைவர் பொன்வண்ணன் நன்றி உரை ஆற்ற பொதுக்குழு கூட்டம் நிறைவடைகிறது. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பேரவை கூட்ட அழைப்பிதழ் கொண்டுவரும் உறுப்பினர்கள் மட்டுமே இக்கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT