Last Updated : 09 Jul, 2017 04:56 PM

 

Published : 09 Jul 2017 04:56 PM
Last Updated : 09 Jul 2017 04:56 PM

கொலை விளையும் நிலம் ஒரு அரசியல் படம்: இயக்குநர் பாலாஜி சக்திவேல்

'கொலை விளையும் நிலம்' ஒரு அரசியல் படம் தான் என்று ஆவணப்பட திரையிடலில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் குறிப்பிட்டார்.

காவிரியில் தண்ணீர் வராததால் ஏற்பட்ட விவசாய பாதிப்பு, விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட துயர சம்பவங்களை மையமாக வைத்து ‘கொலை விளையும் நிலம்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்திருக்கிறார் க. ராஜீவ்காந்தி.

இந்த ஆவணப்படத்தின் திரையிடல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆவணப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் நெகிழ்வுடன் பேசினார்கள்

இந்நிகழ்ச்சியில் பாலாஜி சக்திவேல் பேசியதிலிருந்து "மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு இந்த ஆவணப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாக படிப்பதை விட, ஆவணப் படமாக பார்க்கும் போது நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தை விதைத்ததிற்கு நன்றி.

'கொலை விளையும் நிலம்' ஒரு அரசியல் படம் தான். மக்கள் அரசியலைப் பேசியிருக்கும் படம். போராடாமல் எதுவும் நடக்காது என்பது தான் இந்த ஆவணப்படத்தின் அடிநாதம். விவசாயிகளுக்கு விவசாயிகள் மட்டுமல்ல, அனைவரும் சேர்ந்து போராட வேண்டும் என்பது தான் இதற்குள் இருக்கும் அரசியல். அரசியல்வாதிகள் இதை தெரியாமல் இல்லை.

இப்படத்தை அரசியல்வாதிகள் ஆதரிக்கிறோம் என்று சொன்னாலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த ஆவணப் படத்தில் பேசியிருக்கும் தாய்மார்கள், குழந்தைகள் நமக்கு பல விஷயங்களைச் சொல்லி கொண்டே இருக்கிறார்கள். அதனால் நாம் அனைவருமே பாதிப்படைந்திருப்போம். இந்த ஆவணப்படத்தின் தாக்கம் கண்டிப்பாக மிகப்பெரிய ரசாயன மாற்றம் உண்டு பண்ணும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று பேசினார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்

50 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தில் ‘அம்மண அம்மண தேசத்துல..’ என்று தொடங்கும் பாடலை எழுதியிருப்பவர் தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் ராஜுமுருகன். பாடலுக்கு இசை ஜி.வி.பிரகாஷ். ஆவணப்படத்தில் குரல் கொடுத்திருப்பவர் சமுத்திரக்கனி. இசையமைப்பாளர் ஜோஹன் இப்படத்துக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். கார்த்திக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ராஜேஷ் கண்ணனும் ரமேஷ் யுவியும் செய்துள்ளனர். நா.சதக்கத்துல்லா, எஸ்.கவிதா இணைந்து இந்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x