Published : 09 Jul 2017 04:56 PM
Last Updated : 09 Jul 2017 04:56 PM
'காலா'வில் ரஜினியோடு நடித்த அனுபவத்தைப் பற்றி கூறுங்கள் என்று தனுஷ் கேட்ட கேள்விக்கு சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளார்.
'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தனுஷ், கஜோல், சமுத்திரக்கனி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
இரண்டாம் பாகம் குறித்து சமுத்திரக்கனி, "’வேலையில்லா பட்டதாரி’ எனது வாழ்க்கையை மாற்றிய ஒரு திரைப்படம். மறுபடியும் 2-ம் பாகம் செய்வோம் என்று கேட்ட போது, கண்டிப்பாக 10 பாகம் வரை செய்வோம் என்று செய்யத் தொடங்கினேன்" என்று பேசினார்.
இச்சந்திப்பில் 'காலா'வில் ரஜினியோடு நடித்த அனுபவத்தைக் கூறுங்கள் என்று சமுத்திரக்கனியிடம் தனுஷ் கேள்வி எழுப்பினார். அதற்கு சமுத்திரக்கனி "சினிமாவுக்கு வந்ததற்கு ஏதாவது செய்தது போன்ற ஒரு உணர்வு. ரஜினி சாருடைய 'நான் சிகப்பு மனிதன்' படத்தைப் பார்க்க வீட்டில் காசு தரமாட்டேன் என்று கூறிவிட்டார்கள். அப்படம் ஓடிய திரையரங்கில் போய் முறுக்கு விற்று, தொடர்ச்சியாக 60 காட்சிகள் பார்த்தேன். அப்படிப் படங்கள் பார்த்து, எங்கே எல்லாமோ ஓடி மறுபடியும் அவர் முன்னாடி போய் நின்றுள்ளேன்.
ரஜினி சார் இன்று என் தோள் மீது கையைப் போட்டு வசனம் பேசும் வாய்ப்பை இயக்குநர் ரஞ்சித்தும், தனுஷ் தம்பியும் கொடுத்திருக்கிறார்கள். அவருடன் முதல் காட்சி நடித்து முடித்தவுடன், வீட்டுக்கு தொலைபேசியில் "போதும். இனிமேல் சினிமாவில் கிடைப்பது எல்லாம் போனஸ்" என்று சொன்னேன். அந்தளவுக்கு ஒரு மனநிறைவு கிடைத்தது" என்று பேசினார் சமுத்திரக்கனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT