Published : 02 Oct 2018 11:40 AM
Last Updated : 02 Oct 2018 11:40 AM

உயிருக்குப் போராடிய நிலையில் சிகிச்சை பெற்றுவந்த இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மரணம்

திருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளருமான பாலா பாஸ்கர் நேற்று இரவு சுமார் 1 மணிக்கு உயிரிழந்தார்.

மலையாளத் திரையுலகின் இளம் இசைமைப்பாளர் பாலா பாஸ்கர். 12 வயது முதல் மேடைகளில் இசைக்கச்சேரி நடத்தி வந்த இவர் சிறந்த வயலின் இசைக்கலைஞர். 17 வயதில் பாலா பாஸ்கர் இசையமைத்த மாங்கல்ய பல்லாக்கு திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி திருச்சூரில் உள்ள கோயிலுக்கு, மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வி ஆகியோருடன் அவர் காரில் சென்றார். ஓட்டுநர் அர்ஜூன் காரை ஓட்டினார். வழிபாடு முடித்துவிட்டு அவர்கள் காரில் திருவனந்தபுரம் திரும்பிக் கொண்டிருந்தனர். திருவனந்தபுரம் அருகே பள்ளிபுரம் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பாலா பாஸ்கர் மற்றும் குடும்பத்தினர் பலத்த காயமடைந்தனர்.

மகள் தேஜஸ்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும் அவரது மனைவியும் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு சுமார் 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பாலா பாஸ்கர் உயிரிழந்தார்.

பாலா பாஸ்கர் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் பாலா பாஸ்கர் உடல், திருவனந்தபுரத்தில் அவர் படித்த கல்லூரி வளாகத்தில் வைக்கப்படும். இன்று மாலை தகனம் செய்யப்படும் என பாலா பாஸ்கர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x