Last Updated : 23 Jan, 2015 12:04 PM

 

Published : 23 Jan 2015 12:04 PM
Last Updated : 23 Jan 2015 12:04 PM

சிறகடிக்கும் பட்டம், சீறிப் பாயும் காளை

பொங்கல் என்ற பெயரில் நாம் கொண்டாடும் உழவர் திருநாள், தமிழர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு முக்கியப் பண்டிகை யாகத் திகழ்கிறது. பருவ மாற்றத்தை வரவேற்கும் சங்கராந்தி என்ற பெயருடைய இப்பண்டிகையின் வேறுபட்ட அம்சங்கள் பல மொழிகளின் திரைப்படங்களில் நன்கு காட்சியாக்கம் பெற்றுள்ளன.

பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப் பொங்கலன்று மாடுகளை அலங்கரித்து நாம் நடத்தும் ஜல்லிக்கட்டு நிகழ்வு போல, அன்றையதினம் வட இந்தியாவின் பல இடங்களில் பட்டம் விடும் போட்டி நடைபெறும். இவ்விதமான ஜல்லிக்கட்டு பட்டம் விடும் போட்டி ஆகிய நிகழ்வுகளைப் போற்றும் தமிழ், இந்திப் படப் பாடல்களைப் பார்ப்போம்.

பட்டம் விட்டுக்கொண்டு கதாநாயகன், நாயகி பாடுவதாக அமைந்துள்ளது இந்தப் பாடல்.

திரைப்படம். பாபி (அண்ணி)

பாடலாசிரியர். ராஜேந்திர கிஷன்

இசை. சித்ரகுப்த்.

இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு

தயாரிப்பு ஏ.வி. மெய்யப்பன்.

நடிப்பு பால்ராஜ் சஹானி - பண்டரிபாய்.

பாடல்.

சலிரே - சலிரே மேரி பதங்க் சலிரே

சலி பாதலோங்கே பார் ஹோக்கே

டோர் பே சவார்

சாரி துனியா ஏ தேக் - தேக் ஜலிரே

சலிரே - சலிரே மேரி பதங்க் சலிரே .. ..

பாடலின் பொருள்:

செல் செல் என் பட்டமே செல்

மேகத்துக்கு அப்பால் நூல் வழியே

சவாரி செய்துகொண்டு செல்

இதைப் பார்க்கும் இந்த உலகம் முழுவதும்

பொறாமையடையும் வண்ணம் செல்

அருமையான தென்றலில் அலையாகச் செல்

பறக்கும் ரதம் எழுவது போல

திருமணச் சிந்தனை உடைய ஒரு மணப்பெண்

கார்காலப் பருவத்தில் நடந்து செல்வது போல

(என் பட்டமே நீ வானத்தில் பற)

என் பட்டத்தின் வண்ணம் பச்சை

இந்தப் பட்டம் நீல வானின் அரசி

இன்னும் (நீண்ட நேரம்) பறப்பதற்கு இயலும்

(இதை விடும் நாம்) இளமை உடையவர்கள்

மற்ற வலிமை குன்றியவர்கள் போல் அல்ல

தொடாதே (நெருங்காதே) பார் இந்தப் பட்டம் நூலை (மட்டும்) துணையாகக் கொண்டு தனியாக

மின்னல் கீற்று போலப் பறப்பதை

இதன் (பறக்கும்) வேகத்தையும் தீவிரத்தையும்

கண்டு மனம் குமையும் உள்ளங்களை

(அவர்கள் விடும் பட்டங்களைப் போல)

இது வெட்டி வீழ்த்திவிடும்

செல் செல் என் பட்டமே செல்

மேகத்துக்கு அப்பால் நூல் வழியே

சவாரி செய்துகொண்டு செல்.

மாட்டுப் பொங்கலின் முக்கிய நிகழ்வாக மட்டுமின்றி தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவும் கருதப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்வை மிகச் சிறப்பாகப் போற்றும் தமிழ்ப் பாடல் அண்மையில் டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படத்தில் இடம் பெற்றுள்ளது.

பாடலாசிரியர். கு.மா. பாலசுப்ரமணியம்.

பாடியவர்கள் . பி. சுசீலா குழுவினர்.

பாடல்.

பெண்: அஞ்சாத சிங்கம் என் காளை

இது பஞ்சா பறக்கவிடும் ஆளை

இந்த ஆபத்தை நாடிவரும் வீரன்

பாரிலே யாரடி

குழு: கும்மாளம் போடும் உன் காளை

இது கொட்டம் அடக்குமடி நாளை

அங்கே கூசாமல் போராடும் மாவீரன்

நேரிலே பாரடி

பெண்: கூரான கொம்பு ரெண்டு சீராக மின்ன கண்டு

வீராதி வீரனெல்லாம் கூறாமல் போனதுண்டு

மாறாத ஆசை கொண்டு வீராப்பு பேசிக்கொண்டு

மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு

ஓ...ஓ...ஓ...

மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு

ஆண் வாடை கண்டாலே ஆகாது

இது ஆவேசம் கொண்டாலே பொல்லாதது

குழு: வேலேந்தும் காளையெல்லாம்

உன் வேல் விழியால் சொக்கிடுவார்

வேங்கை போல் துள்ளிடுவார்

வெற்றி அடைந்திடுவார்

கண்ணாலம் பண்ணாத ஆண் பிள்ளை

உனக்குக் கட்டாயம் ஆவானே மாப்பிள்ளை

பெண்: அஞ்சாத சிங்கம் என் காளை

இது பஞ்சா பறக்கவிடும் ஆளை

இந்த ஆபத்தை நாடிவரும் வீரன்

பாரிலே யாரடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x