Published : 09 Nov 2016 12:07 PM
Last Updated : 09 Nov 2016 12:07 PM

சினிமா எடுத்துப் பார் 83: தாணு கொடுத்த பட்டம்!

பனி சூழ்ந்த மலை அடிவாரத்தின் பின்னணியில் படமாக்குவதை எல் லோருமே விரும்புவோம். விஜய காந்த், ராதிகா நடித்த ‘நல்லவன்’ படத் துக்காக காஷ்மீர் பனி மலைக்கே போய் படம் பிடிக்க வேண்டும் என்று திட்ட மிட்டோம். அந்தப் பகுதியில் இருந்த ஊர்க்காரர்களை விசாரித்தபோது, ‘‘உயரத்தில் முழுதும் பனி சூழ்ந்த மலை கள் இருக்கின்றன. அங்கே வரிக் குதிரை கள் மட்டும்தான் செல்ல முடியும்!’’ என்றனர்.

நானும், ஒளிப்பதிவாளர் விநாய கம் அவர்களும் அந்தப் பனி படர்ந்த மலைக்கு, குதிரைகளின் மீது ஏறிச் சென்றோம். மலை ஓரத்தில் குதிரைகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அருகில் பள்ளம். கரணம் தப்பினால் 600 அடி கீழே விழ வேண்டியதுதான். அப்படி ஒரு ரிஸ்க் நிறைந்த சூழலுக்கு இடையே பனி மலையை அடைந்தோம். அங்கே செல்லும் வரைக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.

நெடுந்தூரம் கடலுக்குள் சென்ற பிறகு எப்படி சமுத்திரம் மட்டுமே தெரியுமோ, அந்த மாதிரி பனி மலைக்குள் நுழைந்த தும் சுற்றிலும் பனியாக இருந்தது. யாரும் படப்பிடிப்பு நடத்தாத அந்த இடத்தில் படம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலும் அதிகமானது. இருந்தாலும், இவ் வளவு சிரமத்துக்கு இடையே அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண் டுமா என்ற யோசனையோடு வந்து விஜய காந்தை கேட்டோம். அவரோ உற்சாகத் தோடு, ‘அந்த மாதிரி இடத்துலதான் எடுக்கணும்!’ என்றார். தயாரிப்பாளர் தாணு எப்போதுமே படம் நல்லா வரும் என்றால், கொஞ்சம் கூட மறுப்பு சொல்ல மாட்டார். ‘எத்தனை குதிரைகள் வேண்டு மானாலும் வைத்துகொள்ளுங்கள்!’’ என்று அனுமதி கொடுத்துவிட்டார்.

மொத்த யூனிட் ஆட்களோடும், பொருட்களோடும் குதிரைகள் மீது ஏறி பனி மலையை நோக்கி புறப்பட்டோம். அக்காட்சி குதிரைப் படைகள் போவது போலவே இருந்தது. சண்டைப் பயிற்சி யாளர் சூப்பர் சுப்பராயன். ஜூடோ ரத்தினம் மாஸ்டரோட உதவியாளரான இவர் வித்தியாசமாக வேலை செய்யும் இளைஞராக எங்கள் யூனிட் டில் இணைந்தார். சண்டைக் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கினோம். அப் போது படப்பிடிப்பு நடக்கும் இடத் துக்கு மதிய சாப்பாடு வந்து சேர வில்லை. இந்த மாதிரி சிக்கல்கள் உருவாகும் என்றே எப்போதும் கையில் பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ் வைத்திருப்போம். இருந்த ஸ்நாக்ஸை எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டு பசியை சமாளித்தோம்.

முதல் நாள் படப்பிடிப்பில் இப்படி ஓர் அனுபவம். அடுத்த நாள் இந்த மலைக்கு கீழ் பகுதியில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாமே என்று விஜயகாந்திடம் கேட்டேன். அதுக்கு அவர், ‘முடியவே முடியாது சார். கஷ்டப்பட்டு எடுத்தால்தான் படம் நல்லா வரும். அங்கேதான் எடுக்க வேண்டும்!’’ என்று பிடிவாதமாக கூறிவிட்டார். அதேபோல அடுத்த நாளும் அங்கே போய் படப்பிடிப்பு நடத்தினோம். அதிர்ச்சியான பாதையில் பயணித்து பல த்ரில்லான அனுபவங்களை சந்தித்து எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி அது. படம் பார்க்கும்போது சிறப்பான காட்சியாக வந்ததோடு, மக்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.

லாரிகளின் அணிவகுப்பு்

காஷ்மீர் மலைப் பகுதியில் விஜய காந்த், ராதிகா பாடலை படமாக்கினோம். அந்த நேரத்தில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகே வரிசையாக 50-ல் இருந்து 60 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நின்றன. படத்தின் தயா ரிப்பு நிர்வாகி நாகப்பனை அனுப்பி, ‘எதுக்காக லாரிகள் வரிசையா நிக் குது?’ன்னு விசாரிக்கச் சொன்னோம். ‘‘அத்தனை லாரிகளும் லடாக் போகிற தாம். லாரியில் உணவுப் பொருட்கள், மளிகை சாமான்கள் இருக்கின்றன. வெளியே வரமுடியாத அளவுக்கு பெய் யும் பனிக் காலத்தில் லடாக் பகுதியில் வசிக்கிற மக்களுக்கு தேவையான பொருட்கள்தான் அது!’’ என்று வந்து சொன்னார்கள்.

அந்த மலை சூழ்ந்த இடத்தில் அத் தனை லாரிகளையும் வரிசையாக வைத்து படமாக்கினால் நல்லா இருக் குமே என்ற யோசனை எனக்கு வந்தது. விஜயகாந்த், ராதிகா இருவரையும் வைத்து பாடல் படமாக்குவதை அப்படியே நிறுத்திவிட்டு லாரிகளின் பின்னணியில் சண்டைக் காட்சியை படமாக்கினோம். படம் பார்த்த பலரும் இவ்வளவு உயரமான மலையில் எப்படி இத்தனை லாரிகளை வாடகைக்கு எடுத்து ஷூட் செய்தீங்க?’’ என்று வியப்பாக கேட்டாங்க.

சண்டைக் காட்சிகளில் விஜயகாந்த் தனித்து முத்திரை பதிப்பவர். தன்னோடு மோதும் வில்லன்களை அந்த ஐம்பது, அறுபது லாரிகளுக்கு இடையே எதிர் கொண்டு ஒரு கையை உயர்த்தி வில்லன் களை அடிக்கும்போது கை அப்படியே நின்றுவிட்டது. நான் ஓடிப்போய் கையைப் பிடித்து மடக்க முயற்சித்தால் வலியால் துடிக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஓடிவந்து கையை மேலே தூக்கி கீழே இறக்கினார். கை சரியாகிவிட்டது. ‘என்ன சார் இப்படி ஆயிடுசே!’’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இது மாதிரி சில நேரத்துல ஆகிடும் சார். அப்புறம் சரியாயிடும்!’’னு கேஷுவலாக பதில் சொன்னார். இப்படியெல்லாம் காட்சிகளை த்ரில்லோடு எடுத்தோம்.

ராதிகா சிறந்த நடிகை மட்டுமல்ல; நல்ல சமையல் கலை நிபுணரும்கூட. மொத்த யூனிட்டுக்கும் பிரெட் ரோஸ்ட், வேர்க்கடலை சாலட் செய்துகொடுப்பார். அதில் பச்சை மிளகாய், வெங்காயம், எலுமிச்சைச் சாறு, கொத்துமல்லி எல் லாம் சேர்த்து அப்படி ஒரு பக்குவமாக கமகமவென அதை தயாரித்துக் கொடுப் பார். அந்த மாதிரியான வேர்க்கடலை சாலட்டை நான் எங்கேயுமே சாப்பிட்டது இல்லை. அதுவும் குளிர் சூழ்ந்த அந்த காஷ்மீர் பனியில் சூடான டீ சாப்பிடும் போது, அது எந்த சுவைக்கும் ஈடாக இருக் காது. ஹீரோ, ஹீரோயின், டெக்னீஷியன் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் படக் குழுவினர் ஒரு குடும்பம் மாதிரி சேர்ந்து படப்பிடிப்பை நடத்துவோம் என்பதற்காக இதை சொல்கிறேன்.

கலைப்புலியின் வாழ்த்து

சென்னையில் ‘நல்லவன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்கள் ஆள் உயர மாலையோடு அங்கு வந்தார். அதைப் பார்த்ததும் நான், ‘என்ன தாணு சார். இன்னைக்கு விஜயகாந்த்துக்கு பிறந்த நாளா!?’’ என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, ‘உங்களுக்குத்தான் பிறந்தநாள்!’’ என்றார். எனக்கு என் பிறந்த நாளே நினைவில் இல்லை. ‘நல்லவன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்த் தலை மையில் மொத்த யூனிட்டும் என் பிறந்த நாளை மிகப்பெரிய அளவில் கொண்டாடி யது. அதோடு மட்டுமல்ல; அன்று தாணு சார் எனக்கு ஒரு பட்டத்தையும் கொடுத்தார்? அது என்ன பட்டம்?

- இன்னும் சொல்வேன்… | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x