Published : 13 Jul 2016 11:16 AM
Last Updated : 13 Jul 2016 11:16 AM

சினிமா எடுத்துப் பார் 66: போதையில் இருக்கும் கமல்!

கஜுராஹோ ஏர்போர்ட்டில் விமானம் தரை இறங்கப்போகும்போது, தன் நிலைப்பாட்டை இழந்து இங்கும் அங்கும் அலைமோதி பறப்பதை உணர்ந் தோம். மரண பயம் வந்தது. அந்த நேரத் தில் ரஜினி, ‘‘பயப்படாதீங்க. எல்லோரும் தியானம் பண்ணுங்க... ஒண்ணும் ஆகாது!’’ என்று தைரியப்படுத்தினார். அதனால்தான் அவர் மெய்ஞானி. அடுத்த சில நிமிடங்களில் விமானம் ஓடு பாதையில் தரை இறங்கியது. விமானத் தில் இருந்து வெளியே வந்ததும், ஏர்போர்ட் அதிகாரிகளை சந்தித்து, ‘‘என்ன ஃபைலட் இப்படி ஓட்டுகிறார்?’’ என்று சத்தம் போட்டோம். அவர்கள், ‘‘நீங்கள் வந்தது பெரிய ரக விமானம். ஏர்போர்ட் ஓடுபாதையின் நீளம் குறை வாக உள்ளது. சில பைலட் சரியாக இறக்கிவிடுவார்கள். சிலர் தடுமாற்றத் தில் சிக்குவார்கள். இந்த ஃபைலட்டை திட்டாதீர்கள்’’ என்றார்கள். உயிர் பயம் என்றால் என்னவென்று எங்களுக்கு காட்டிய பயணம் அது. எப்படியோ பெரிய விபத்தில் இருந்து எல்லோரும் தப்பித்ததில் ஒரு மகிழ்ச்சி.

படத்தில் வில்லன் செந்தாமரை.ரஜினியை எப்படியாவது விரட்டிவிட்டு அவருடைய பொசிஷனைக் கையில் எடுத்துக்கொள்ள முனைப்போடு இருப்பார். ஒரு காட்சியில் ரஜினியை செந்தாமரை சவுக்கால் அடிப்பார். படம் ரிலீஸானப் பிறகு செந்தாமரை ஒரு நிகழ்ச்சிக்கு போனபோது ரசிகர்கள், ‘‘எங்கள் தலைவனை எப்படி அடிக் கலாம்?’’என்று சூழ்ந்துகொண்டனர். செந்தாமரை, ‘‘நானும், ரஜினியும் நல்ல நண்பர்கள். அது நடிப்புதான். வில்லன் இருந்தால்தானே ரஜினியை ஹீரோ என்று சொல்ல முடியும். அவரை உயரத்துக்கு தூக்கிவிடத்தான் நாங்கள் எல்லாம் வில்லனாக நடிக்கிறோம்!’’ என்று சொல்லி தப்பித்து வந்தாராம். செந்தாமரை எங்கள் குழுவில் ஒருவர் மட்டுமல்ல; நண்பர் குழாமிலும் ஒருவர். பார்ப்பதற்கு கடுமையாக இருப்பார். பழகுவதில் கனிவாக இருப்பார். அவர் மனைவி கவுசல்யா செந்தாமரையும் ஒரு குணச்சித்திர நடிகை. தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

‘அடுத்த வாரிசு’ படத்தைத் தயாரித்த துவாரகேஷ் கன்னடத்தில் ஒரு படம் எடுத்தார். அது அங்கே மிகப் பெரிய வெற்றி. ரஜினி அந்தப் படத்தை பெங்களூ ரில் துவாரகேஷுக்குத் தெரியாமல் பார்க்க ஆசைப்பட்டார். அவர் எப்படி படத்தை பார்த்தார் தெரியுமா? பர்தா அணிந்துகொண்டு தியேட்டருக்குப் போய் மக்களுக்குத் தெரியாமல் அந்தப் படத்தைப் பார்த்தார். படம் மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படம்தான் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் எடுத்த பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’. அந்த ‘லக..லக..லக…’ ரஜினி நடிப்பையும், ஜோதிகாவின் நடிப்பையும் யாரும் மறக்க முடியாது.

ஏவி.எம். தயாரித்து கமல் நடித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலுக்கு இரண்டு கதாபாத்திரங்கள். ஒரு கமல் நல்லவர். ஒரு கமல் போதைக்கு அடிமையானவர். அந்தக் காலத்தில் இப்போது உள்ள குரோமோ கீ, கிராஃபிக்ஸ் இதெல்லாம் இல்லை. ஒளிப்பதிவாளர் தன் திறமையால் கேமராவில் மாஸ்க் பண்ணி ஒவ்வொரு கதாபாத்திரமாக எடுக்க வேண்டும். சின்னத் தவறு நடந்துவிட்டாலும் நடுவில் கோடு தெரிந்துவிடும். ஒளிப்பதி வாளர் பாபு இரட்டை வேடப் படங்களை எடுப்பதில் திறமைசாலி. ஒரு கமலுக்கு ராதா, இன்னொரு கமலுக்கு சுலக்ஷனா ஜோடி. ஏவி.எம்மின் ‘குழந்தையும் தெய்வ மும்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஜமுனா அம்மா வேடத்தில் நடித்தார். அவர் சிறந்த குணச்சித்திர நடிகை.

-

சும்மா நிக்காதீங்க...’ பாடல் காட்சியில் கமல், சுலக் ஷனா

- ‘

நானாக நானில்லை தாயே...’ பாடல் காட்சியில் ஜமுனா, கமல்ஹாசன்



இப்படத்தில் கமல் எப்போதும் போதையிலேயே இருப்பார். போதை யில் நடன நடிகைகளோடு ‘வானம் கீழே வந்தால் என்ன.. பூமி மேலே போனால் என்ன’ என்று பாடிக்கொண்டே கமல் நடனம் ஆடுவார். கமலுடன் சேர்ந்து கேமராவும் போதையில் ஆடியது. பல விதமான டிரிக் ஷாட்டுகள் எடுக்கப்பட் டன. கமல் மேலே பறப்பது, பறந்தபடி கீழே வந்து பெண்களுடன் ஆடுவது, பூமி மேல் நின்றாடுவது, அப்படியே வான வெளியில் பறப்பது என, எந்தவிதமான கிராபிக்ஸும் இல்லாமல் ஒளிப்பதி வாளர் பாபு மேனுவலாக அந்தக் காட்சி களை எடுத்தார். கமல் அந்தப் பாட்டு நன்கு வருவதற்காக 17 நாட்கள் பணியாற்றி னார். அதற்கு மேலும் கால்ஷீட் தருவதற்கும் தயாராக இருந்தார்.

இப்படத்தில் சுலக்‌ஷனா கமலை காதலிப்பார். ஆனால் கமல் பிடியே கொடுக்க மாட்டார். அப்போது சுலக்‌ஷனா ‘‘சும்மா நிக்காதீங்க… நான் சொல்லும் படி வைக்காதீங்க’ என்று பாட்டுப் பாடி கலக்குவார். விஜயா கார்டனில் எடுக் கப்பட்ட அந்தப் பாடல் பெரிய பாப்புலர் ஆனது. போதைக்கு அடிமையான கமலை வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவிடம் ஒப்படைப்பார்கள். அம்மா போதைக் கமலை மனிதனாக மாற்று வார். அப்போது கமல், ‘நானாக நானில்லை தாயே’ என்று பாடுவார். அந்தப் பாட்டும் இசையும், இருவரின் நடிப்பும் பார்ப்பவர் மனதை கலங்க வைத்தது.

படத்துக்கு கிளைமேக்ஸ் இன்னும் பெரிய அளவில் அமைய வேண்டும் என்று பலவிதமாக யோசித்தோம். அப்போது ‘இதயம் பேசுகிறது’ ஆசிரியர் மணியன் சார், சரவணன் சாரை பார்க்க வந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது, ‘நான் ‘தில் ஹா ஹீரா’ன்னு ஹிந்தியில ஒரு படம் எடுத்தேன். அதன் கிளைமேக்ஸுக்கு பல லட்ச ரூபாய் செலவழித்தேன்.

ஆனால், அந்தப் படம் ஓடவில்லை. அந்த கிளைமேக்ஸை நீங்கள் பயன்படுத் திக்கொள்ள முடியுமா?’’ என்று கேட்டார். அதற்கு சரவணன் சார், ‘‘எல்லோருக்கும் அந்த ஹிந்தி கிளைமேக்ஸைப் போட் டுப் காட்டுங்கள். முத்துராமன் சரியாக வரும் என்று கூறினால் மேலே பேசுவோம்’’ என்றார்.

எல்லோரும் கிளைமேக்ஸைப் பார்த் தோம். மிக பிரம்மாண்டமாக நிறையப் பணம் செலவழித்து ஹெலிகாப்டர் எல்லாம் வைத்து எடுத்திருந்தார்கள். சரவணன் சாரிடம் பலரும் பலவிதமாக சொன்னார்கள். சரவணன் சார் என்னிடம், ‘‘நீங்க சொல்லுங்க?’’ என்றார். ‘‘நானும், எடிட்டர் விட்டல் சாரும், ஒளிப்பதிவாளர் பாபுவும் இன்னொரு தடவை பார்த்துட்டு உங்களுக்கு முடிவு சொல்றோம்’’ என்று சொன்னேன். அதைப் போல நாங்கள் படம் பார்த்தோம்.

‘‘அந்தப் படத்திலும் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் இருப்பதுபோலவே வில்லன்கள் கூட் டம். அவர்களைப் போராடி ஜெயிக்கும் கதாநாயகன். ஹிந்திப் படத்தில் இருந்த ஹெலிகாப்டர் சேஸ், வில்லன்கள் ஹெலிகாப்டரைச் சுடும்போது, அது வெடித்து சிதறுகிற காட்சி உள்ளிட்ட லாங் ஷாட்டுகளை எல்லாம் நாம் எடுத் துக்கொள்ளலாம். அந்த லாங் ஷாட்டு களுக்கு மேட்ச் பண்ணி கமல், வில்லன் கள் கூட்டங்களை க்ளோஷ்அப்பில் எடுத்துக்கொண்டால் கிளைமேக்ஸை பிரம்மாண்டமாக ஆக்கிவிடலாம்!’’ என்று சரவணன் சாரிடம் சொன்னோம். சரவணன் சார், ‘‘ரிஸ்க் எடுக்காதீங்க. ஜாக்கிரதையா பண்ணுங்க’’ என்றார். அவர் கூறிய எச்சரிக்கையோடு மும்பைக்குச் சென்று ஹிந்திப் படம் எடுத்த இடங்களிலேயே மேட்ச் செய்து கமலையும் மற்ற நடிகர்களையும் க்ளோஸ்அப் ஷாட்களில் எடுத்தோம்.

அந்த கிளைமேக்ஸின் உச்சகட்டத் தில் கமல், ஹெலிகாப்டரில் போய் வில்லன்களுடைய கார்கள் மீது மோதுவது போல காட்சி. அந்த ஷாட்டை எடுப்பதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு ஹெலிகாப்டர் வரவில்லை. அன்றைக்கு இரவே நாங்கள் எல்லோரும் சென்னைக்கு புறப்பட வேண்டும். சரவணன் சாருடைய மகன் எம்.எஸ்.குகன் அவர்கள் படப்பிடிப்பு வேலைகளைக் கவனிக்க எங்களோடு வந்திருந்தார்கள். நிலைமையைப் புரிந்துகொண்ட குகன் அவர்கள் ஒரு முடிவோடு புறப்பட்டு போனார்.



- இன்னும் படம் பார்ப்போம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x