Published : 16 Sep 2016 11:19 AM
Last Updated : 16 Sep 2016 11:19 AM

கோலிவுட் கிச்சடி: கவலைப்படாத சுனைனா

கவலைப்படாத சுனைனா

இயல்பான பாவனைகளாலும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவரும் சுனைனா, தமிழ் சினிமாவிலிருந்து திடீரென்று காணாமல்போனாலும் அதுபற்றிக் கவலைப்படாமல் அவ்வப்போது வந்து அழகான கதாபாத்திரத்தில் முகம் காட்டுவார். தற்போது ஜீவா - காஜல் அகர்வால் நடித்து முடித்திருக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தில் அதுபோன்றதொரு முக்கியக் கதாபாத்திரத்தில் சுனைனாதான் நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்து அவரை நடிக்க வைத்திருக்கிறாராம் படத்தின் இயக்குநர் டீகே.



எவன் நினைச்சாலும் என்னைப் புடிக்க முடியாது

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் ‘கத்திச் சண்டை’ படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு மறு விஜயம் தரும் இந்தப் படத்துக்காக விஷால் - தமன்னா பங்குபெற்ற டூயட் நடனப் பாடலைத் தற்போது அஜித் படம் படமாக்கப் பட்டுவரும் ஜார்ஜியாவில் படமாக்கித் திரும்பியிருக்கிறார்கள். டூயட் பாடலோடு ‘எவன் நெனச்சாலும் என்ன புடிக்க முடியாது’ நாயகன் அறிமுகப் பாடலையும் படமாக்கித் திரும்பியிருக்கிறார்களாம். கத்திச் சண்டை தீபாவளிக்கு வெளியாவதை உறுதிசெய்திருக்கிறார்கள்.



சந்தானத்தின் புதிய நாயகி

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துவரும் ரெஜினா கெஸன்ட்ரா தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகிவிட்டார். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, லோகேஷ் இயக்கத்தில் சந்தீப், ஸ்ரீ நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘மாநகரம்’, அதர்வா நடிப்பில் உருவாகிவரும் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களோடு உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் படம் எனத் தமிழில் வேகம் காட்டும் ரெஜினா, செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.



மறுஆக்கத்திலும் மாறாத நட்சத்திரம்!

‘வேலையில்லா பட்டதாரி' படத்தின் கன்னட மறுஆக்க உரிமையை வாங்கியிருக்கிறார் ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ். இந்தப் படத்தில் கன்னட ஹீரோ மனோரஞ்சன் நாயகனாக நடிக்க, தமிழில் நாயகியாக நடித்த அமலா பாலையே கன்னடத்துக்கும் அழைத்திருக்கிறார்கள். அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். இதற்கிடையில் பிரபல மலையாள இயக்குநர் ஜொஷி இயக்கத்தில் சத்தியராஜ் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘முருகவேல்’ என்ற படத்திலும் அமலா பால்தான் கதாநாயகி.



ராதா 25

தனியார் தொலைக்காட்சி யொன்றில் பிரபலமான ரியாலிட்டி நடன நிகழ்ச்சியின் கண்டிப்பான நடுவர்களில் ஒருவாராகக் கவர்ந்துவருகிறார் முன்னாள் கதாநாயகி ராதா. இவருடைய மகள்கள் கார்த்திகா, துளசி இருவரும் திரையில் மின்னலைப் போல் வந்து பளிச்சிட்டபின் அமைதிகாத்து வருகிறார்கள். இதற்கிடையில் தனது இருபத்தைந்தாவது திருமண நாளைப் பெரும் விழாவாகக் கொண்டாடி கோலிவுட்டை வியக்க வைத்திருக்கிறார் ராதா. இந்த விழாவில் பாரதிராஜா, சுஹாசினி, காவ்யா மாதவன், ராதாவின் சகோதரி அம்பிகா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் எனத் தமிழ்த் திரையுலகமும் திரண்டு வாழ்த்தியிருக்கிறது.



விக்ரம் அடுத்து?

விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘இருமுகன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் கடந்த நான்கு ஏழு நாட்களாக உலகம் முழுவதும் அசத்தலான வசூலைப் பெற்று வெற்றிப் படமாகியிருக்கிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் விக்ரம் அடுத்து ஹரி இயக்கத்தில் ‘சாமி 2’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘சிங்கம் 3’ படத்தை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுவருவதால் இந்த இடைவெளியில் ஒரு குறுகிய காலப் படத்தில் நடிக்க விக்ரம் முடிவு செய்துவிட்டதாக நம்பகத் தகவல். இந்தப் படத்தை சசிகுமார் நடித்த ‘பிரம்மன்’ படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இயக்கவுள்ளதாகவும் தகவல் கிடைக்கிறது.



சுந்தர்.சி-யின் சீரியல் அட்டாக்!

அரண்மனை இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் பிரம்மாண்ட பட்ஜெட் படத்துக்கு ‘சங்க மித்ரா’ என்று தற்காலிகமாக ‘ஒர்க்கிங் டைட்டில்’ வைத்திருக்கிறார்களாம். தென்னிந்தியாவின் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் ஒன்றாகத் தயாராகவிருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தனது 100-வது படமாக உருவாக்க இருக்கிறது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் எனப் பல பிரம்மாண்டங்கள் இருந்தாலும் இன்னும் இந்தப் படத்துக்கு நட்சத்திரத் தேர்வு முடிவாகவில்லை. என்றாலும் தெலுங்குப் படவுலகின் வசூல் நாயகன் மகேஷ் பாபு, தொடர்ந்து வெற்றிகள் கொடுத்துவரும் ஜெயம் ரவி ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள் என்று இயக்குநர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்துக்கு புரடெக்‌ஷன் டிசைனை வடிவமைக்க ஹாலிவுட்டிலிருந்து ஆளை அமர்த்துகிறார்களாம். இந்தப் படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் அதிகம் என்பதால் கிடைக்கும் இடைவெளியில் நான்கு தென்னிந்திய மொழிகளில் ஒரேநேரத்தில் ‘தேவ சேனா’ என்ற தொலைக்காட்சித் தொடரைத் தயாரிக்கிறாராம் சுந்தர்.சி. இந்தத் தொடரை ராஜ் கபூர், செல்வா இணைந்து இயக்குகிறார்கள். பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x