Published : 08 Apr 2019 12:44 PM
Last Updated : 08 Apr 2019 12:44 PM

ஆப்பிளின் புதுவரவு ‘ஆப்பிள் கார்ட்’

கேட்ஜெட்டுகளின் பிதாமகன் என்று புகழப்படும் ஆப்பிள் இப்போது நிதி சேவையிலும் களம் இறங்கியிருக்கிறது. வங்கிகள் மட்டுமே நிதி சேவை வழங்கும் என்ற நிலை மாறி வெகுகாலம் ஆகிவிட்டது என்பதால், ஆப்பிள் இந்த விஷயத்தில் ரொம்பவே தாமதம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று எந்தவொரு இ-காமர்ஸ் நிறுவன

மும் நிதி சேவை வழங்கலாம் என்ற அளவுக்கு தொழில்நுட்பமும் நவீனமும் மாறிவிட்டது. இ-காமர்ஸ் உலகின் ஜாம்பவானாக இருக்கும் அமேசானின் வழியில் இப்போது ஆப்பிளும் தனக்கென தனி கிரெடிட் கார்ட் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் 25-ம் தேதி நடைபெற்ற ஆப்பிள் ஈவென்ட்டில் ஆப்பிள் நிறுவன சிஇஓ ‘ஆப்பிள் கார்ட்’ என்ற கடன் அட்டை சேவையை உலகுக்கு அறிவித்தார். என்னதான் மற்ற நிறுவனங்களுக்கெல்லாம் பின்னால் ஆப்பிள் இந்த சேவையை அறிமுகப்படுத்தினாலும், எதிலும் தனித்தன்மை காட்டுவதுதான் ஆப்பிளின் சிறப்பு என்பது இதிலும் உறுதி செய்திருக்கிறது.

உங்களிடம் ஆப்பிள் போன் இருந்தால் போதும், அதிலிருந்தே நீங்கள் இந்த சேவையைப் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஒப்புதல் பெற்றதுமே உங்களுடைய ஐபோனில் உள்ள ஆப்பிள் வாலட் செயலியில் ஆப்பிள் கடன் அட்டை சேமிக்கப்பட்டுவிடும். அந்த

செயலியிலேயே கடன் அட்டையின் அனைத்துவிதமான தகவல்களையும் பார்த்துக்கொள்ளலாம். கடன் அட்டையின் விவரங்கள், பர்ச்சேஸ் ஹிஸ்டரி, ஸ்டேட் மென்ட், தவணை தொகை, தவணை தேதி, கடன் அட்டையில் உள்ள பேலன்ஸ் தொகை அனைத்துமே அதிலேயே தெரிந்துகொள்ளலாம். நீங்கள் எங்கு என்ன பர்ச்சேஸ் செய்தீர்கள் என்பது இடம், கடையின் பெயர் உள்ளிட்ட தகவல்களும் கூட அதில் இடம்பெற்றிருக்குமாம்.

இதுபோக, இந்த கடன் அட்டையில் இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. பொதுவாக கடன் அட்டைக்கு 16 இலக்க எண்கள், வாலிட்டிட்டி முடியும் நாள், சிவிவி எண், கையெழுத்து ஆகியவை இருக்கும். ஆனால், இந்த ஆப்பிள் கடன் அட்டையில் அப்படி எந்தவொரு எண்ணுமே இருக்காது. ஆப்பிள் வாலட் மூலம் செய்யப்படும் பர்ச்சேஸ்களுக்கு இவை எதுவுமே தேவையில்லை.

வேறு இடங்களில் இந்த கடன் அட்டையைப் பயன்படுத்தி பர்ச்சேஸ் செய்ய வேண்டுமென்றால், அப்போது மட்டும் ஆப்பிள் வாலட் ஆப் மூலம் தற்காலிக 16 இலக்கை எண்ணை நாம் ஜென்ரேட் செய்துகொள்ள முடியும். இந்த எண் ஒவ்வொரு பர்ச்சேஸுக்கும் மாறிக்கொண்டே இருக்கும்.

இந்தக் கடன் அட்டை செயல்பாடுகளை ஆப்பிளுடன் சேர்ந்து கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மாஸ்டர் நிறுவனங்கள் செயல்படுத்துகின்றன. இந்தக் கடன் அட்டையில் ஆஃபர்களும் உண்டு. ஆப்பிள் புராடக்ட்கள், சேவைகளை பர்ச்சேஸ் செய்தால் 3 சதவீதம் கேஷ்பேக் உண்டு. 

பிற தளங்களில் பர்ச்சேஸ் செய்தால் 2 சதவீதம் கேஷ் பேக். மேலும் இதிலிருந்து பிறருக்குப் பரிவர்த்தனையும் செய்ய முடியும். மாஸ்டர் கார்டு ஏற்றுக்கொள்ளப்படுகிற எல்லா இடங்களிலும் இதுவும் ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சரி டிஜிட்டல் கார்டு மட்டும்தானா, கையில் கார்டு கிடைக்காதா என்றால் அதுவும் கிடைக்கிறது. டைட்டானியம் கார்டு ஒன்றை இதற்காக உருவாக்கியிருக்கிறது. இதனை ஆப்பிள் ஸ்டோர்களில் பெற்றுக்கொள்ள முடியும். மிக முக்கியமான அம்சம் இதில் தவணைத் தொகையைத் தாமதமாகச் செலுத்துவதற்கு எந்த அபராதக் கட்டணமோ, கூடுதல் வட்டியோ இல்லையாம். இந்தக் கடன் அட்டையின் தொழில்நுட்பம் அட்வான்ஸ்டாக இருந்தாலும், அனைத்தையும் யூசர் பிரண்ட்லியாக செயல்படுத்த எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என ஆப்பிள் கூறியுள்ளது.

இந்த சம்மருக்கு அமெரிக்காவில் இந்தக் கடன் அட்டை அறிமுகமாகிறது. மெல்ல அடுத்தடுத்த மாதங்களில் மற்ற நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. ஆனால் என்ன ஏற்கெனவே ஆளாளுக்கு நான்கைந்து வங்கிகளின் கடன் அட்டைகளை வைத்திருக்கிறோம்.

போதாததுக்கு ஏற்கெனவே பேடிஎம், அமேசான் பே, போன்பே என வாலட்டுகளும் வரிசை கட்டி நிற்கின்றன. இப்போது ஆப்பிளும் இந்த வரிசையில் வந்தால், எந்த நிறுவன சேவையைத்தான் பயன்படுத்துவது என்ற குழப்பம்தான் உண்டாகிறது. இதை எல்லா அட்டைகளுக்கும், வாலட்டுகளுக்கும் கடவுச்சொல்லை நினைவில் வைத்திருப்பது மெகா சவால்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x