Published : 09 Jul 2018 12:28 PM
Last Updated : 09 Jul 2018 12:28 PM
வி
வசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என்று பிரதமர் மோடி பல்வேறு கட்டங்களில் வாக்குறுதிகளை அளித்துள்ளார். இதற்கு ஏற்ப இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க பல மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் பாஜக அரசு சொல்லிவந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் அமர்ந்த இந்த நான்கு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டதைவிட , 2019 நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நெருங்கிவரும் நிலையில் புதிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில், கரும்பு விவசாயிகள் நிலுவை தொகையினை வழங்குவதற்கு வசதியாக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.9,000 கோடி வரை கடன் திட்டத்தினை அறிவித்தது. இந்த நிலையில் விவசாய உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு புதிய முறையை கடைபிடிக்க உள்ளதாகவும் மத்திய வேளாண்மைத் துறை இணையமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்பினை வெளியிட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விவசாய உற்பத்தி பொருட்களின் விலைச் சரிவினை ஈடுகட்ட மத்திய அரசு ரூ.12,000 கோடி முதல் ரூ. 20,000 கோடி வரை செலவிட்டு வருகிறது. இந்திய உணவுக் கழகம் மூலம் அரிசி, கோதுமை தானியங்கள் மட்டும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால் 2018-ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது இதர விவசாய விளை பொருட்ளுக்கு குறைந்தபட்ச ஆதர விலையை நிர்ணயிக்க புதிய முறை கொண்டுவரப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். அதன்படி தற்போது நிதி ஆயோக் அமைப்பு மூன்று பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தை உறுதி திட்டம் (MAS), விலை குறையும் போது கொள்முதல் (PDPS) மற்றும் தனியார் கொள்முதல் மற்றும் கிடங்குகளில் சேமிப்பு திட்டம் என்கிற மூன்று திட்டங்களை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
விவசாய உற்பத்தியை சிறு தொழில் துறையுடன் இணைப்பதற்கு அரசின் முயற்சிகள் உள்ளன. இதன் மூலம் விவசாய பொருட்களை கொள்முதல் செய்வது, சேமிப்பது, குளிர்பதன கிடங்கு வசதிகள் போன்றவை சாத்தியமாகும் என நம்புகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்கிறார் சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சி கவுன்சிலின் பேராசிரியர் அசோக் குலாட்டி, இந்த அறிவிப்புகளின் பயன் விவசாயிகளுக்கு நேரடியாக சேர்வதில்லை. நாட்டில் உள்ள இடைத் தரகர்கள் ஆதார விலையை விவசாயிகளுக்கு தர தயாராக இல்லை என்கிறார்
இந்தியாவின் உணவு உற்பத்தி, பற்றாக்குறையிலிருந்து தன்னிறைவுக்கு செல்வதற்கு விவசாய துறையை மேம்படுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. பரிந்துரைகள் மேலிருந்து செயல்படுத்தப்படலாம். ஆனால் அதன் பலன் யாருக்கு போய் சேருகிறது என்பதில் அக்கறை இல்லை எனில் என்ன செய்வது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT