Published : 09 Jul 2018 12:29 PM
Last Updated : 09 Jul 2018 12:29 PM

எதிர்கால தொழில்நுட்பமாகும் ஹைட்ரஜன் எரிபொருள்!

வாகனப்புகை மாசுபாட்டால் புதுடெல்லியின் காற்று மாசுபாடு நாளுக்குநாள் மோசமடைந்து கொண்டிருக்கிறது. மக்கள் காற்றை சுவாசிப்பதற்கே அச்சப்படும் சூழல் உள்ளது. இதனால் புதுடெல்லியில் டீசல் வாகனங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு தடை, டீசல் வாகன விற்பனைக்கு தடை, எண் வரிசைப்படி வாகனங்களை இயக்குவது என பலப் பல உத்திகளை பயன்படுத்துகிறது. ஆனால் வாகன விற்பனைக்கான தடைக்கு எதிராக நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் புதுடெல்லி மாநில அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் ஹைட்ரஜன் வாகனங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை ஏன் எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது.புகை மாசுவை குறைப்பதற்கான மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றாக சூழல் சீர்கேடு இல்லாத ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகளுக்கு ஏன் முயற்சி செய்யக்கூடாது என்றும் கேட்டுள்ளது.

இதற்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கூறியுள்ளதுடன், வெளிநாடுகளில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டிள்ளது. குறிப்பாக கலிபோர்னியாவில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும், ஹைட்ரஜன் வாகன பயன்பாட்டையும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கலிபோர்னியாவில் ...

கலிபோர்னியா மாகாணம் காற்று மாசுபாடு இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான விற்பனையில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. ஆனால் எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கும், ஹைட்ரஜன் பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்காக ஷேல் மற்றும் டொயோடா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

ஹைட்ரஜன் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் தவிர, இதற்கான சார்ஜிங் மையங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டிலிருந்து இந்த வேலையை தொடங்கிவிட்டது. முதற்கட்டமாக ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தும் 4,000 வாகனங்கள் பயன்பாட்டுக் கொண்டு வரப்பட்டன. 2020-ம் ஆண்டுக்குள் ஜீரோ மாசு என்கிற இலக்கினை வைத்துள்ளது.

இங்கு டொயோடா, ஹோண்டா, ஹூண்டாய், டெய்ம்லர் போன்ற நிறுவனங்கள் பேட்டரி வாகனங்களை விற்க தொடங்கியுள்ளன. டொயோடா ஹைபிரிட் வாகனங்களை பொது போக்குவரத்துக்கு இயக்குகிறது. அரசு இந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பதால் நிறுவனங்களுக்கு இந்த அழுத்தம் உருவாகியுள்ளது.

எரிபொருள் நிலையம்

இந்த வாகனங்களின் விற்பனைக்கு ஏற்ப ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் அங்கு அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது 33 எரிபொருள் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஷேல் எரிபொருள் நிறுவனம் டொயோடா நிறுவனத்துடன் இணைந்து தற்போது இதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் 100 ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளன. இதற்கான 1640 கோடி டாலர் செலவிட உள்ளன.

ஷேல் நிறுவனம் எதிர்கால எரிபொருள் தொழில்நுட்பம் ஹைட்ரஜன் பேட்டரிதான் என குறிப்பிட்டுள்ளதுடன், உலகம் முழுவதும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக லாஸ்வேகாஸ் விமான நிலையம் அருகில் இரண்டு ஹைட்ரஜன் எரிபொருள் நிலையம், ஜெர்மனியில் நான்கு நிலையங்களையும் தொடங்கியுள்ளது. லண்டனில் விரைவில் ஏழு நிலையங்களை தொடங்க உள்ளது.

கார் உற்பத்தி நிறுவனங்களின் ஒத்துழைப்பும், அரசு அமைப்புகளின் ஆதரவும் இருந்தால் ஹைட்ரஜன் எரிபொருள் பரவலாக பயன்பாட்டுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார் ஷேல் நிறுவனத்தின் ஹைட்ரஜன் பிரிவு மேலாளர் ஆலிவர் பிலிப்.

டொயோடா நிறுவனமும் எதிர்கால இன்ஜின் தொழில்நுட்பங்களில் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளதாகக் கூறியுள்ளது. 2050-ம் ஆண்டுக்குள் ஹைட்ரஜன் வாகனங்களை கொண்டுவர இலக்கு வைத்துள்ளது.ஹைட்ரஜன் பேட்டரி வாகனங்கள் தற்போது வரை வர்த்தக ரீதியான தயாரிப்பாக வெற்றிபெறவில்லை. இதற்கான செலவுகள் அதிகம் என்பதால் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இந்தியாவில் டாடா நிறுவனம் இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

நடைமுறை சிக்கல்கள்

அதுபோல ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையங்களை அமைக்க ஆகும் செலவு சுமார் 17 கோடி என்கிறது ஷேல் நிறுவனம். தவிர இதற்கான பேட்டரிகளை பிளாட்டினம் கொண்டுதான் தயாரிக்க முடியும் என்பதால் பேட்டரி செலவும் அதிகமாக இருக்கும். இந்த உலோகத்துக்கான தேவையும் அதிகரிக்கும்.

மேலும் ஹைட்ரஜன் பேட்டரிகளுக்கு சார்ஜ் ஏற்றுகையில் ஒவ்வொரு முறையும் ஒரு பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிய பின்னர் அவற்றை குளிர்விக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் தினசரி 50 அல்லது 60 டேங்குகள் மட்டுமே எரிபொருள் நிரப்ப முடியும். இதுபோன்ற சிக்கல்கள் களையப்படும்பட்சத்தில் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் பேட்டரி தொழில்நுட்பம் எளிமையானதாக மாறும்.

சுற்றுச் சூழல் என்கிற விஷயத்தில் நிரந்த தீர்வுகள் எட்டப்படாத நிலையில் சூழல் மாசுபாடும் தீராத பிரச்சினையாகவே இருக்கும். இந்த விஷயத்தில் இந்தியா முன்னோக்கி சிந்திக்க வேண்டும் என்பதையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x