Published : 09 Jul 2018 12:29 PM
Last Updated : 09 Jul 2018 12:29 PM

வெளிநாடுகளில் சாதிக்குமா மஹிந்திரா?

டிராக்டர் உற்பத்தியில் இந்தியாவில் முன்னணி நிறுவனமான மஹிந்திரா தனது அடுத்த கட்ட வளர்ச்சித் திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தங்களது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் தங்களது டிராக்டர் விற்பனைக்கு பல உத்திகளை பயன்படுத்தி வருகிறது.

தற்போது 37 சதவீதமாக உள்ள வெளிநாடு விற்பனை வளர்ச்சியை இரட்டிப்பாக்க உள்ளது. உள்நாட்டில் 43 சதவீதமாக உள்ள சந்தையை 50 சதவீதமாக்கும் முயற்சிகளிலும் உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் டிராக்டர் சந்தையை பிடிக்கும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. வட அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ நாடுகளில் கணிசமான சந்தையை பிடிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நாடுகளில் கையகப்படுத்தல்கள் மூலம் சந்தையில் இறங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த மூன்று பிராந்தியங்களுக்குமான தயாரிப்பு மேம்பாட்டு மையத்தையும் மஹிந்திரா தொடங்கியுள்ளது. போலந்தில் சாம்போ ரோசென்லெ நிறுவனம் இந்த பணிகளை மேற்கொள்ளும். மிட்சுபிஷி மஹிந்திரா அக்ரி மெஷினரி நிறுவனம் ஜப்பானில் மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர்களை தயாரிக்கும். துருக்கியில் ஹிசர்லர் நிறுவனம் தயாரிப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

நிறுவனத்தின் இது போன்ற நடவடிக்கைகளால் பல நாடுகளிலும் சந்தையை கைப்பற்றுவது மற்றும் அங்கு தயாரிப்பு மேம்பாட்டு மையங்களை உருவாக்குவது என்பதை இலக்காகக் கொண்டுள்ளது தெளிவாகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஏறக்குறைய மற்ற நாடுகளுக்கும் ஏற்றதாக இருப்பதும் இதற்குக் காரணமாகும். தவிர வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப நிறுவனத்தின் தயாரிப்புகள் கிடைப்பதும் காரணம்.

இந்த மேம்பாட்டு மையங்களின் மூலம், இந்த பிராந்தியங்களில் இருந்து பெறும் வருமானமும் நிறுவனத்துக்கு அதிகரிக்கும். குறிப்பாக தற்போது ஜப்பானிலிருந்து 45 கோடி டாலராக உள்ள வருமானத்தை 100 கோடி டாலராக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது. அமெரிக்காவில் 60 கோடி டாலரும், துருக்கியில் 24 கோடி டாலரும் வருமானமாக உள்ளது. இந்த சந்தைகளிலும் 100 கோடி டாலர் வருமானத்துக்கும் இலக்கு வைத்துள்ளது. மேலும் நிறுவனத்தின் சர்வதேச வருமானத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் 5 சதவீதமாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது.

உள்நாட்டு டிராக்டர் சந்தையில் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் இயங்குவதால் சந்தையின் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆனால் டிராக்டர் போன்ற விவசாய கருவிகளின் விற்பனையை பொருத்தமட்டில் நிறுவனத்தின் இலக்கு மட்டுமே போதுமானதல்ல, பொருத்தமான பருவ சூழல் அமைய வேண்டும். அப்போதுதான் டிராக்டர் விற்பனை அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x