Published : 25 Jun 2018 10:53 AM
Last Updated : 25 Jun 2018 10:53 AM

அலசல்: பிளாக்செயின் தொழில்நுட்பம் தீர்வளிக்குமா?

தொ

லைத் தொடர்பு செயல்பாடுகளை முறைப்படுத்தவும், புதிய தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கு ஏற்ப தயாராகவும் புதிய தொலைத் தொடர்பு கொள்கை 2018 என்கிற முன்வரைவினை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது. இந்த முன்வரைவு தொடர்பாக இந்த வாரத்தில் அமைச்சரவை குழு விவாதிக்க உள்ளது. இதற்கு அனுமதி கிடைத்துவிட்டால் வரும் மாத இறுதிக்குள் புதிய தொலைத் தொடர்பு கொள்கை 2018 நடைமுறைக்கு வந்துவிடும்.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பொழுது தேவையற்ற அழைப்புகள் தவிர்க்கப்படுவதுடன், செய்தியின் ரகசியத் தன்மை யும் பாதுகாக்கப்படும். இதனால் தேவையில்லாத டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள், குறுஞ்செய்திகள் வருவதைத் தடுக்க முடியும். டெலிமார்க்கெட்டிங் சேவைகள் வேண்டும் என்பவர்களுக்கு மட்டும் அல்லது இந்த சேவையை ஏற்றுக் கொள்ளும் சந்தாதாரர்களுக்கு மட்டும் அனுப்புவதற்கு பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என முன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறையை பயன்படுத்துவதில் உலக அளவில் டிராய்தான் முதல் முயற்சியை எடுக்கிறது.

தற்போதுவரை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பெற்று வருகின்றன. ஆனால் புதிய முன்வரைவில் அங்கீகரிக்கப்பட்ட டெலி மார்க்கெட்டிங் முகவர்கள் மட்டுமே சந்தாதாரர்களின் விவரங்களை பெற இந்த தொழில்நுட்பம் அனுமதி அளிக்கும். மேலும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மற்றும் சந்தாதாரர்களுக்கு இடையிலான அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் இந்த தொழில்நுட்பம் பதிவு செய்யும். இந்த சேவை தேவையில்லை என பதிவு செய்யும் சந்தாதாரர்களுக்கு மீண்டும் மீண்டும் செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்வதை இந்த தொழில்நுட்பம் தடுக்கும். ஒருவேளை டெலிமார்கெட்டிங் சேவைகளை அனுமதிக்க வேண்டும் என்றால் டிராய் செயலி மூலம் சேவையை பெற முடியும்.

இந்த தொழில்நுட்பத்தில் என்ஸ்கிரிப்ஷன் ரகசிய குறியீடு அடிப்படையில் இயங்குவதால் தகவல்களை அனுமதி இல்லாமல் மாற்றவோ, திருத்தவோ முடியாது. இந்த தொழில்நுட்பத்தை அரசின் அனைத்து துறைகளிலும் பயன்படுத்த நிதி ஆயோக் அமைப்பும் பரிந்துரை செய்துள்ளது.

தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான ரகசிய செய்தி பரிமாற்றமாக இருக்கிறது என்பதால் அதிகபட்ச பாதுகாப்பை இந்த தொழில்நுட்பம் அளிக்கும். குறிப்பாக உலக அளவில் அதிகரித்துவரும் தகவல் திருட்டு என்கிற அச்சுறுத்தலுக்கு எதிராக மிகப்பெரிய பாதுகாப்பினை பிளாக்செயின் தொழில்நுட்பம் அளிக்கும். உலகின் முக்கிய நிறுவனங்கள் இதற்கு மாற முயற்சி செய்து கொண்டிருக்கும் சூழலில் டிராய் அமைப்பும் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x