Published : 30 Apr 2018 11:39 AM
Last Updated : 30 Apr 2018 11:39 AM

அச்சுறுத்தும் நிதிப் பற்றாக்குறை!

ச்சா எண்ணெய் விலை அதிகரித்துவரும் நிலையில் மோடி அரசின் பொருளாதாரம் ஆட்டம் காணும் நிலையில் உள்ளது என்கின்றன ஆய்வுகள். கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 75 டாலராக அதிகரித்துள்ளது. இதனால் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பு இருக்கும் என்கிறது ஆய்வு நிறுவனமான நொமுரா. குறிப்பாக 10 பேரல் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியா வில் நிதிப் பற்றாக்குறையில் 0.4 % தாக்கத்தினை உருவாக்கும் என்கிறது.

இது குறித்து நொமுராவின் பொருளாதார ஆலோசகர் ராபர்ட் சுப்பராமன் கூறுகையில், பல்வேறு ஆய்வுகள் அடிப்படையில் கச்சா எண்ணெய் விலை 2019-ம் ஆண்டுவரையில் பேரல் 68 டாலராக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்து அதனடிப்படையில் நிதிப்பற்றாக்குறை அளவை முடிவு செய்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவின் பணவீக்கத்தில் 30 முதல் 40 புள்ளிகள்வரை தாக்கம் ஏற்படும். பணவீக்கம் அதிகரித்தால் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய நெருக்கடி ரிசர்வ் வங்கிக்கு உருவாகும் என்கிறார்.

கோடக் எகனாமிக் ஆய்வு 3 விதமான கணிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை நடப்பு ஆண்டில் பேரல் 65 டாலராக இருந்தால் நிதிப்பற்றாக்குறை 2.4 சதவீதமாக இருக்கும் என்கிறது. இது கடந்த ஆண்டுகளைவிட அதிகமான பற்றாக்குறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே 70 டாலர் மற்றும் 75 டாலராக இருக்கும் நிலையில் 2.6 % மற்றும் 2.9 சதவீதமாக பற்றாக்குறை அதிகரிக்கும் என்கிறது. அதேநேரத்தில் 2013-14-ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை 107 டாலர் என்கிற அளவில் இருந்தபோது இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 1.7 சதவீதத்துக்குள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலை சரிந்த காலகட்டத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கான மானியத்திலிருந்து அரசு வெளியேறியது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையை அரசு கட்டுப்படுத்தியது. இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமாக இருந்தது. ரிசர்வ் வங்கியும் கணிசமாக வட்டி விகிதங்களை குறைத்தது. இந்த நிலையில்தான் கச்சா எண்ணெய் விலை உயர்வு மத்திய அரசின் முன்னால் மிகப் பெரிய சவாலாக வந்துள்ளது. உடனடியாக அரசு பெட்ரோலிய பொருட்களின் மீதான அதிகபட்ச வரிகளை குறைக்க வேண்டும். ஏனென்றால் 2014 நவம்பருக்கும் 2016 ஜனவரிக்கும் இடையில் பெட்ரோல் மீதான சுங்க வரியை லிட்டருக்கு 11.27 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ரூபாய் மதிப்பிலும் வீழ்ச்சி இருக்கும், தவிர வரும் ஆண்டில் பொதுத்தேர்தலும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிப்புகள் சொல்கின்றன. உள்நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் உருவாகும் நெருக்கடிகளை எப்படி சமாளிக்கப்போகிறது அரசு?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x