Last Updated : 30 Jan, 2017 11:15 AM

 

Published : 30 Jan 2017 11:15 AM
Last Updated : 30 Jan 2017 11:15 AM

பயம்... ட்ரம்ப் என்றால் பயம்

பந்துவீச்சுக்கு சாதகமான பிட்சில் திறமையான பேட்ஸ்மேன்கள் எளிதில் வெளியேறுவார்கள். ஆனால் கடைசி கட்ட பேட்ஸ்மேன்களை அவுட் செய்வது எளிதல்ல. இனி இழப்பதற்கு ஏதும் இல்லை என்னும் மனநிலையில் அதிரடி ஆட்டம் ஆடுபவர், அவராக ஆட்டம் இழந்தால்தான் உண்டு. கிட்டத்தட்ட அதே அதிரடி மனநிலையில் இருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். பதவி ஏற்ற ஒரு வாரத்தில் அவர் பேசிய மற்றும் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் அதிரடி ரகம். கூகுளில் டொனால்ட் ட்ரம்ப் என தேடினால் அமெரிக்க சிஇஓக்களுக்கு, பத்திரிகையாளர்களுக்கு என ஒவ் வொருக்கும் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறார். எந்த ஒரு கட்டுரைக்கும் எதாவது ஒன்லைன் அல்லது தீம் இருக்கும். இந்த கட்டுரைக்கு டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே தீம்.

டிரான்ஸ் பசிபிக் கூட்டமைப்பிலிருந்து விலகல்

தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கி இருக்கிறார் ட்ரம்ப். பதவி ஏற்ற 72 மணி நேரத்தில் டிரான்ஸ் பசிபிக் கூட்டமைப் பில் இருந்து வெளியேறுவதாகக் கையெழுத்திட்டார். 12 நாடுகள் இருக் கும் இந்தக் கூட்டமைப்பு மூலம் ஆசியா வுக்கு செல்வதற்கான முக்கியமான பாதையாக இருக்கும் என்னும் எண் ணத்தில் ஒபாமா இந்தக் கூட்டமைப்பை முக்கியமானதாக பார்த்தார். ஆனால் பதவி ஏற்ற சில நாட்களில் இந்த கூட் டமைப்பில் இருந்து விலகினார் ட்ரம்ப்.

ஆஸ்திரேலியா, புருனை, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிகோ, நியூசிலாந்து, சிங்கப்பூர், பெரு, வியட் நாம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த கூட்டமைப்பை உருவாக்கின. இதற்கான பேச்சு வார்த்தை கடந்த 2015 ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்து கடந்த பிப்ரவரியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சர்வதேச ஜிடிபியில் 40% இந்த நாடுகள் வசம் உள்ளன.

ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இருப்பது சரியானது. இது போன்ற கூட்டமைப்பு இருப்பது சரியல்ல. இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி யதன் காரணமாக பல லட்சம் அமெரிக் கர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். இந்த கூட்டமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியதால் இந்த கூட்டமைப்பின் எதிர் காலமே கேள்விக்குறியாக இருக்கிறது.

அமெரிக்கா இல்லாமல் எப்படி என மீதமுள்ள நாடுகளின் தலைவர்கள் பேசச் தொடங்கி இருக்கிறார்கள். ட்ரம்ப் விலகியதால் சீனா இந்த கூட்டமைப்பில் இணைவதற்கான சூழல் உருவாகி இருக்கிறது. ட்ரம்ப் சீனாவுக்கு வழங்கி இருக்கும் மிகப்பெரிய பரிசு இது என்னும் அளவுக்கு கூட ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளை சில பொருளாதார வல்லுநர்கள் விமர்சனம் செய்திருக் கிறார்கள்.

மெக்ஸிகோ மீது வரி?

டிரான்ஸ் பசிபிக் கூட்டமைப்பு மீது ட்ரம்ப் போலவே ஹிலாரிக்கும் நம்பிக்கை இல்லை. அதனால் ஹிலாரி வந்திருந்தாலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கலாம் என வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், மெக்ஸிகோ மீது 20% இறக்குமதி வரி விதிக்கப் போவதாக ட்ரம்ப் கூறியிருப்பது எதிர் பாராதது. மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருளுக்கு 20% வரி விதிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் இந்தத் தொகையை வைத்து மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே 3,100 கிலோமீட்டர் நீளத்துக்கு தடுப்புச்சுவர் அமைக்க இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இதற்கு சுமார் 1,200 கோடி டாலர் செலவாகும் என்றும், இருக்கும் பல வழிகளில் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரி விதிப்பதும் ஒரு வழி என்று கூறியிருக் கிறார்.

வெள்ளை மாளிகை செய்தி தொடர் பாளர் சீன் ஸ்பைஸர் கூறும்போது, இப்போதைக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரியும், இறக்குமதி செய்யும் பொருளுக்கு வரி விலக்கும் இருக்கிறது. இறக்குமதிக்கு வரி விதிக் கும் பட்சத்தில் இந்த தடுப்புச்சுவரை எளிதாக அமைக்கமுடியும் என தெரிவித் திருக்கிறார். ஒரு ஆண்டுக்கு மெக்ஸி கோவில் இருந்து 30,000 கோடி டாலர் அளவுக்கு பொருட்கள் ஏற்றுமதி யாகின்றன.

இது சுவர் எழுப்புவதற்காக மெக்ஸிகோ செலுத்தும் கட்டணம் அல்ல. மெக்ஸிகோ வில் இருந்து பொருட்களை வாங்கும் வட அமெரிக்கர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் எனவும் ட்ரம்ப் கூறியிருக் கிறார். மெக்ஸிகோ வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த வரியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.

இது போன்ற நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த மெக்ஸிகோ அதிபர் என்கிதோ ரெனா நீடோ, டொனால்ட் ட்ரம் புடனான சந்திப்பை ரத்துசெய்துவிட்டார். மேலும் அமெரிக்கா அமைக்கும் இந்த தடுப்புச்சுவருக்கு மெக்ஸிகோ பணம் கொடுக்காது என்றும் கூறிவிட்டார். அமெரிக்காவை சரியாக மதிக்கவில்லை என்றால் வேறு வழியில் செல்ல வேண்டி இருக்கும் என ட்ரம்ப் எச்சரிக்கை செய் திருக்கிறார். மெக்ஸிகோவின் பணக் காரரான கார்லோஸ் ஸ்லிம், பத்திரிகை யாளர்களை சந்திப்பதையே விரும் பாதவர். இந்த சூழ்நிலையில் ட்ரம்பை பார்த்து பயப்படத் தேவையில்லை. இது மெக்ஸிகோவுக்கு ஒரு வாய்ப்பு, ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த உதவ முடியும் என கூறியிருக்கிறார்.

அமெரிக்க சிஇஓக்களுக்கு எச்சரிக்கை

பதவி ஏற்றவுடன் அமெரிக்காவின் முக்கியமான நிறுவனங்களின் தலை மைச் செயல் அதிகாரிகளை சந்தித்தார் ட்ரம்ப். அதில் தொழிலுக்கு தடையாக இருக்கும் எதையும் நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கிறது. உள்நாட்டிலேயே தொழிற்சாலையை அமைப்பதற்கான வேலையை தொடங்குங்கள். உள்நாட்டில் தொழில் தொடங்குபவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். இந்த ஆலோசனையை ஏற்காதவர்களுக்கு வேறுவிதமான கட்டணங்கள் விதிக்கப்படலாம் என கூறினார். ஒரு வேளை வெளிநாடுகளில் ஆலைகளை அமைத்து அங்கிருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் எல்லை வரி (border tax) விதிக்கப்படும். நீங்கள் சீனாவுக்கு ஒரு பொருளை எளிதாக அனுப்ப முடியாது. சில பொருட்களை அனுப்பவே முடியாது. அப்படி இருக்கும் போது எப்படி தடையற்ற வர்த்தகம் என கூறமுடியும்? என ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

பெரும்பாலான அமெரிக்க சிஇஓக்கள் வெளிப்படையாக கருத்து கூறாத நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், உங்களில் பலருக்கு ஏற்பட்டிருக்கும் கவலை என்னையும் ஆட்கொண்டிருக்கிறது. அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள அகதிகள் தொடர் பான புதிய குடியுரிமைக் கொள்கை செயலாக்க உத்தரவு வேதனை அளிக் கிறது. இந்த நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், அதற்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களையே குறிவைக்க வேண்டும்.

அதைவிடுத்து அமெரிக்காவில் வசிக்கும் எல்லா மக்கள் மீதும் சட்ட கண்காணிப்புகளை நீட்டிப்பது அமெரிக்கர்களின் பாதுகாப்பை எந்தவகையிலும் உறுதிப்படுத்தாது. இதனால், நம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய அறிவுசார் வளம் கிடைக் காமல் போகும்.உதவி தேவைப்படுபவர் களுக்கும் அகதிகளுக்கும் நமது நாட் டின் கதவுகளை எப்போதுமே திறந்து வைத்திருக்க வேண்டும். அதுதான் நமது அடையாளம் என தன்னுடைய பேஸ்புக் பதிவில் தெரிவித்திருக் கிறார்.

இந்திய ஐடி நிறுவனங்கள்?

உற்பத்தி நிறுவனங்களைப் போலவே இந்திய ஐடி நிறுவனங்களும் கொஞ்சம் பீதியில்தான் இருக்கின்றன. ஹெச்1பி விசா மூலம் 3.5 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர். நிறு வனங்களைப் போலவே அங்கிருக்கும் பணியாளர்களும் பயத்தில் உள்ளனர். ஹெச்1பி விசாவில் வருபவர்களுக்கு குறைந்தபட்சம் 8,000 டாலர்கள் வழங்க வேண்டும் என ட்ரம்ப் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் தற்போது 10 வருட அனுபவம் இருப்பவர்கள் சுமார் 5000 டாலர் அளவில்தான் சம்பளம் வாங்குகிறார்கள். அங்கே இருந்தால் அதிக சம்பளம் கிடைக்கலாம். இல்லை எனில் இந்தியா திரும்ப வேண்டி இருக் கும் என்பதால் அங்கிருக்கும் பலர் தங் களது திட்டங்களை மாற்றி வருகிறார்கள்.

இதற்கிடையே உலகத்திலேயே நேர் மையற்றவர்கள் என பத்திரிகையாளர் களை தாக்குவது, சீனாவுக்கு நெருக்கடி கொடுப்பது, இந்தியா உண்மையான நண்பன் என மோடிக்கு அழைப்பு விடுப்பது என ட்ரம்பின் அதிரடிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கிரிக்கெட்டில் அவுட் ஆக வாய்ப்பு இருக்கிறது ஆனால் இந்த ஆட்டம் (நான்கு ஆண்டு) எப்படி முடியுமோ?

- karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x