Last Updated : 05 Jun, 2017 11:08 AM

 

Published : 05 Jun 2017 11:08 AM
Last Updated : 05 Jun 2017 11:08 AM

சபாஷ் சாணக்கியா: பயம் விட்டுப் போனால்...

இராமகிருஷ்ணரின் குட்டிக் கதைகள் படித்து இருக்கின்றீர்களா? ஒரு முறை ஒரு முனிவர் ஓர் ஊரில் தங்கியிருந்த பொழுது, கிராம மக்கள் சிலர் அவரிடம் ஓடி வந்து ஒரு விஷப் பாம்பு அவர்களுக்கு மிகவும் தொந்தரவு கொடுப்பதாகச் சொன்னார்கள்.

தனது தவசக்தியால் அப்பாம்புடன் பேசிய முனிவர், அதற்கு முக்திக்கான மந்திரத்தை உபதேசித்ததுடன், இனி மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாதென அறிவுறுத்தினார். இதனால், அதுவரை பெயரளவில் நல்ல பாம்பாக இருந்தது அன்று முதல் உண்மையான நல்ல பாம்பாயிற்று!

ஆனால் பாம்பு சாதுவாகி விட்டதைப் பார்த்த அக்கிராமத்துச் சிறுவர்கள், அதற்குத் தொந்தரவு கொடுக்கத் தொடங்கினர்! அதைக் கல்லால் அடிப்பது, குச்சியால் குத்துவது என விடாது துரத்தினார்கள்.

பாவம் பாம்பு. அந்தச் சிறுவர்களின் சேட்டைகளுக்குப் பயந்து பல நேரம் பொந்தினுள் அடங்கியே கிடக்கும். சரியான உணவின்றி மெலிந்தும் போனது! சில நாட்கள் கழித்து அந்த முனிவர் மீண்டும் அந்தக் கிராமத்திற்கு வந்தார். எலும்பும் தோலுமாயிருந்த பாம்பைப் பார்த்த முனிவருக்கு அதிர்ச்சி! ஏன் இப்படி ஆகி விட்டாய் எனக் கேட்டார்.'

‘ஐயா நான்தான் இப்ப யாரையும் கொத்துவதில்லையே. எனவே அவர்கள் எனக்குப் பயந்த காலம் போய், நான் அவர்களுக்குப் பயப்படும் காலம் வந்துவிட்டது. உண்ண இரையின்றி ஒளிந்து வாழ்கிறேன்' என்றது! இதைக் கேட்ட முனிவர் ‘அட முட்டாள் பாம்பே, நான் உன்னை மற்றவர்களைக் கொத்தாதே, கொல்லாதே என்று தானே கூறினேன்? பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே?

நீ அவ்வப்பொழுது படமெடுத்துச் சீறினால் தான் உன் மேல் பயமிருக்கும். நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும் ' என்று அறிவுறுத்தினாராம்! நம் அன்றாட வாழ்விலும் இதே நிலை தானேங்க! நல்லவனாக இருக்க வேண்டியது தான். ஆனால் கெட்டவர்களுக்கு எப்படிங்க நல்லவனாக இருக்க முடியும்?

‘மற்றவர்களுக்கு நல்லவனாக இருப்பது என்பது கால்பந்து விளையாட்டில் கோல்கீப்பராக இருப்பதற்கு ஒப்பானது.கோல்கீப்பர் எத்தனை கோல்களைத் தடுத்தார் என்பது யாருக்கும் ஞாபகம் இருப்பதில்லை! எத்தனை கோல்களை கோட்டை விட்டார் என்பதைப் பற்றித்தான் பேசுவார்கள்' என்பார் அபிஷேக் திவாரி!

தம்பி, நீங்களே சொல்லுங்கள். உங்களைப் பொல்லாதவன் என்றால் பரவாயில்லையா, அல்லது ஏமாளி என்றால் பரவாயில்லையா? இந்த உலகத்தில் கடினமான ஒன்று நல்லவனாக இருப்பது! அதுவும் ரொம்ப நல்லவனாக இருப்பது ரொம்பக் கடினமானது!

எனது நண்பர் ஒருவர் ஒரு பெரிய நிறுவனத்தின் சென்னைக் கிளையின் மேலாளராக இருந்தார்.மனுஷன் நல்லவர்.எல்லோர்க்கும் உதவ வேண்டும் என்று நினைப்பவர். நம்ம நண்பர் யாரையும் கோபிப்பதில்லை, கண்டிப்பதில்லை, தண்டிப்பதில்லை.

தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்கிற பயம் இல்லாததால் பணியாளர்களிடையே ஒரு மெத்தனப் போக்கு வந்து விட்டது! நீங்கள் நினைப்பதேதான் நடந்தது!இதனை ஏமாற்றுக் காரர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

பயம் விட்டுப் போனால், துளிர் விட்டுப் போகுமில்லையா? நம்ம நண்பரை யாரும் ஒரு மேலதிகாரியாகவே மதிப்பதில்லை. ஆரம்பத்திலிருந்தே தமக்குக் கீழ் பணிபுரிபவர்களை ஒரு தூரத்தில் வைத்து நடத்தாததால், நண்பரால் அந்தக் கட்டுப்பாட்டைப் பின்னர் அமல்படுத்த முடியவில்லை. பணியாளர்கள் தன்னிச்சையாக வருவது, நடந்து கொள்வதென நிலமை சிறுகச்சிறுக மோசமாயிற்று.

ஒரு நாள் தலைமையகத்திலிருந்து உயரதிகாரி ஒருவர் அந்தக் கிளையின் வர்த்தகத்தை ஆய்வு செய்வதற்காக வந்தார்.அந்த அதிகாரி மிகக் கெட்டிக்காரர். பழுத்த அனுபவசாலி. மனிதர்களின் மனோபாவம் அறிந்தவர். பெயரா

ரங்கநாதன் என்று வைத்துக் கொள்வோமா? நம் நண்பரின் அலுவலகத்தில் நடப்பவற்றைப் பார்த்த அவர் என்னப்பா, இப்படி விட்டு விட்டாயே, இழுத்துப் பிடிக்க வேண்டாமா?' என்று கேட்டார்.

நண்பரோ, ‘ஐயா, அவர்கள் பாவம், பிள்ளை குட்டிக்காரர்கள்,வெகு நாட்களாக வேலை செய்கிறார்கள்.நான் மேலிடத்திற்கு ஏதாவது சொல்லப் போய் அவர்களை இடமாற்றம் செய்தாலோ,அவர்கள் வேலை போய் விட்டாலோ என்ன செய்வது?' என்றார்.

ரங்கநாதன், ‘நண்பரே, பணியிடத்தில் கட்டுப்பாடு அவசியம். தவறு செய்தால் முதலில் அதைச் சுட்டிக் காட்டுங்கள். சரியாகவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கத் தயங்காதீர்கள்' என்றார்.

‘மேலாளர்களிடம் பணியாளர்களுக்கு பயம் கலந்த மரியாதை அவசியம். சும்மா தோளில் கை போட விட்டால் சரிப்படாது.ஆங்கிலத்தில் இதை shaking the boat அதாவது படகைக் கொஞ்சம் ஆட்டி விடணும்,பயம் காட்டணும் ' எனத் தொடந்தார்.

‘நண்பரே, அணுகுண்டையே எடுத்துக் கொள்ளுங்கள். அது மொத்தமாய் அழித்து விடும். தவறானது தான். ஆனால் அதை வைத்திருப்பவர்களுக்குத் தானே இந்த உலகம் பயப்படுகிறது?எனவே கெட்டவனாக இருக்கக் கூடாதே தவிர, பயமுறுத்துவது தவறல்ல' என முடித்தார் அந்த ரங்கநாதன்! நண்பர் அதை அமல்படுத்தி வெற்றி கண்டது பின்கதை!

விஷமில்லாத பாம்பும் கூட, படமெடுத்துப் பயமுறுத்தினால் தான் வாழ முடியுமென்கிறார் சாணக்கியர்!

- somaiah. veerappan@gmail. com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x