Published : 08 Jul 2019 03:17 PM
Last Updated : 08 Jul 2019 03:17 PM

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவு: சென்செக்ஸ் 900 புள்ளிகள் வீழ்ச்சி

மத்திய பட்ஜெட் தாக்கம் மற்றும் சர்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் இன்று பெரும் சரிவை சந்தித்தன.

நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் கடந்த 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக காலையில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. அதேசமயம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. தங்கத்துக்கு வரி, பெட்ரோலிய பொருட்களுக்கு கூடுதல் வரி போன்ற அறிவிப்புகள் பங்குச்சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்தநிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின் பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கியது. காலை முதலே வர்த்தகம் சரிவுடன் காணப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணங்களும் இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற்பகல் நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவடைந்து  38,666  புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 268 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து 11,600 புள்ளிகளாக சரிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x