Published : 20 May 2019 04:45 PM
Last Updated : 20 May 2019 04:45 PM
பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காரணமாக பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 39352 புள்ளிகளாகவும், நிப்டி 11828 புள்ளிகளாக உயர்ந்தது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி முதல் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன. இறுதியாக 7-ம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது.
7-ம் கட்ட தேர்தலில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மாதங்களாக நடந்து வந்த தேர்தல் திருவிழா நேற்றைய வாக்குப்பதிவுடன் முடிவடைந்தது. வாக்கு எண்ணகிக்கை 23-ம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின.
இதில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடனேயே ஏற்றம் காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 962 புள்ளிகள் உயர்ந்து 38,892 புள்ளிகளாக வர்த்தகமானது. பின்னர் மாலையில் வர்த்தகம் முடியும்போது, சென்செக்ஸ் 1421 புள்ளிகள் உயர்ந்து 39352 புள்ளிகளில் முடிவடைந்தது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 421 புள்ளிகள் உயர்ந்து 11,828புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT