Published : 22 Feb 2019 05:04 PM
Last Updated : 22 Feb 2019 05:04 PM

‘இன்னமும் தேவை ரூ.200 கோடி’ - சொத்துக்களை விற்கிறார் அனில் அம்பானி

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையில் மேலும் 200 கோடி ரூபாயை திரட்ட ஜியோ நிறுவனத்தின் பாக்கித் தொகையுடன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் அசையா சொத்துக்களை விற்பனை செய்ய அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனில் அம்பானி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு 450 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு செய்ததால் ஒரு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நடத்தி வந்த அனில் அம்பானி, நிறுவனம் நஷ்டமானதால் கடனாளியானார். ₹45,000 கோடி கடன் இருந்த நிலையில், அவரது சகோதரரான முகேஷ் அம்பானி (ஜியோ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் அலைவரிசை, கோபுரங்கள் உள்ளிட்டவற்றை ₹25,000 கோடிக்கு வாங்க முன்வந்தார்.

ஆனால், அதற்கு முன்பு பயன்படுத்திய அலைவரிசை கட்டணம் ₹2,900 தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்தப்படவில்லை. தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அந்த நிறுவனத்துக்கு ₹1,600 கோடி தர வேண்டி இருந்தது.

நீதிமன்ற மூலம் சென்டில்மென்ட் தீர்வு காணப்பட்டு ₹550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் சம்மதித்தது. ஆனால், அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்காததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, தொகையை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 4 வாரங்களுக்குள் எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்தவில்லை எனறால், 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அனில் அம்பானிக்கு கெடு விதித்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக 260 கோடியை திரட்ட அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்களிடம் ஒப்புதலை அந்நிறுவனம் கோரியுள்ளது.  ஒப்புதல் கிடைத்தால் உடனடியாக அந்த பணத்தை எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

எனினும் இன்னமும் 200 கோடி ரூபாயை அனில் அம்பானி செலுத்த வேண்டும். இதனை திரட்ட உடனடியாக கையில் பணம் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தனது சகோதரரின் ஜியோ நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ததற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு கோரியுள்ளார்.

இதில் இருந்து கிடைக்கும் கணிசமான தொகை மூலம் பணம் திரட்ட முடியும் என நம்புகிறார். இதுமட்டுமின்றி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள அலுவலக கட்டடம் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் சிலவற்றையும் விற்பனை செய்யவும் அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தின் உயரதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுபோலவே அனில் அம்பானிக்கு சொந்தமான வேறு நிறுவனத்தின் சில சொத்துக்களை விற்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x