Published : 22 Feb 2019 04:43 PM
Last Updated : 22 Feb 2019 04:43 PM

ஜியோ பாய்ச்சல்: ஒரே மாதத்தில் 85 லட்சம் புதிய வாடிக்கையாளர்களால் ஏர்டெல், வோடபோனுக்கு இழப்பு

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ 85.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

 

இத்தகவல் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனமான ட்ராய் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதன்படி, ''2018-ம் ஆண்டு நவம்பர் கடைசியில் இருந்து டிசம்பர் கடைசி வரை மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117.17 கோடியில் இருந்து 117.6 கோடியாக உயர்ந்துள்ளது. 0.36% என்ற அளவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளது.

 

பிராந்திய வாரியான வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரையில் வடகிழக்கு தவிர மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர்.

 

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ 85.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 28.01 கோடியாக உயர்ந்துள்ளது.

 

மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி (MNP) மூலம் தொலைத்தொடர்பு நிறுவனத்தை மாற்ற, முந்தைய மாதத்தைக் காட்டிலும் அதிக வாடிக்கையாளர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். அதாவது சுமார் 47.6 லட்சம் வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் எம்என்பி மூலம் தங்களின் சேவை நிறுவனத்தை மாற்ற முன்வந்துள்ளனர்.

 

அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட முதல் நிறுவனமான வோடபோன் ஐடியா, சுமார் 23.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 41.87 கோடி வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துள்ளது.

 

அதேபோல 34.03 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த பார்தி ஏர்டெல், 15.01 லட்சம் வாடிக்கையாளர்களை ஒரே மாதத்தில் இழந்துள்ளது'' என ட்ராய் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x