Published : 21 Feb 2019 10:02 AM
Last Updated : 21 Feb 2019 10:02 AM
12 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.48,239 கோடி மூலதனமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது பொதுத் துறை வங்கிகளின் அன்றாட பணிகளுக்காகவும், அவற்றின் தொழில் வளர்ச்சிக்காகவும் மூலதன உதவி செய்யும் வகையில் இந்த நிதி ஆண்டில் ரூ. 48,239 கோடி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக நிதித் துறை செயலர் ராஜிவ் குமார் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் வங்கிகள் உடனடி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இரண்டு வங்கிகளான கார்ப்பரேஷன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளுக்கு முறையே ரூ.9,086 கோடி மற்றும் ரூ.6,896 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு ரூ.4,638 கோடியும், பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ராவுக்கு ரூ.205 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகள் ரிசர்வ் வங்கியின் சீர்திருத்த நடவடிக்கைகளிலிருந்து சமீபத்தில்தான் வெளியே வந்திருக்கின்றன.
இவைபோக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.5,908 கோடியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.4,112 கோடியும், ஆந்திரா வங்கிக்கு ரூ.3,256 கோடியும் மற்றும் சிண்டிகேட் வங்கிக்கு ரூ.1,603 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் வங்கி, யுகோ வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றுக்கு ரூ.12,535 கோடி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT