Published : 20 Feb 2019 10:44 AM
Last Updated : 20 Feb 2019 10:44 AM

தவறு செய்த வங்கி சிஇஓக்களுக்கு வழங்கிய போனஸ், பங்குகளை திரும்ப பெற புதிய விதிமுறை- ரிசர்வ் வங்கி தீவிரம்

வங்கிகளின் நிதி நிலை மோசமாக காரணமான சிஇஓக்களுக்கு வழங்கப்பட்ட போனஸ் மற்றும் பங்குகளை திரும்பப் பெறும் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்கி வருகிறது.

வங்கிகளின் வாராக் கடன் அதிகரிப்பு, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்றாத தலைமைச் செயல் அதிகாரிகள், செபி மற்றும் ஐஆர்டிஏஐ விதிகளை மீறியவர்களுக்கு வழங்கப்பட்ட போனஸ் தொகை மற்றும் பங்குகளை திரும்பப் பெற வழி வகுக்கும் கடுமையான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்கி வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அதேபோல வங்கி தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு வங்கிகளின் நிதி நிலை மதிப்புக்கேற்ப பங்குகளை ஒதுக்குவதற்கான வழிகாட்டுதலையும் உருவாக்கி வருகிறது. அதேபோல வழங்கப்பட்ட கடன் அளவு, வாராக் கடன் விவரம் மற்றும் வங்கி ஈட்டிய லாபம் அடிப்படையில் அவருக்கு அளிக்க வேண்டிய போனஸ் குறித்த விதிமுறைகளையும் ஆர்பிஐ உருவாக்கி வருகிறது. ரிசர்வ் வங்கி விதிமுறைகளைப் பின்பற்றி வங்கிகளின் இயக்குநர் குழு தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு போனஸ் மற்றும் பங்குகளை ஒதுக்கீடு செய்ய வழி ஏற்படும் என தெரிகிறது.

வங்கி சிஇஓ-க்களுக்கு வழங்கப்படும் நிதி சலுகையை ரிசர்வ் வங்கி கணிசமாகக் குறைத்துள்ளது. வங்கிகளின் பங்குகளை அதிக அளவில் பெறுவது போன்ற சலுகைகளை இனி வங்கிகளின் சிஇஓ-க்கள் பெற முடியாது.

பெரும்பாலான வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு வங்கிகளின் சிஇஓக்களுக்கான சலுகைகளை பெருமளவில் ஆர்பிஐ குறைத்துள்ளது.

சமீபத்தில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது பதவிக் காலத்தில் ஒரு நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் அளித்த ராஜினாமாவை ரத்து செய்து அவரை பதவி நீக்கம் செய்ததாக வங்கி நிர்வாகம் அறிவித்தது. அத்துடன் அவருக்கு வழங்கப்பட்ட போனஸ் பங்குகள் உள்ளிட்ட சலுகைகளை திரும்பப் பெறவும் வங்கி இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளிலும் இதுபோன்ற செயல்பாடுகள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டே கடுமையான விதிகளை ஆர்பிஐ உருவாக்கி வருகிறது. அதேபோல பதவியிலிருந்து வெளியேறிய நிலையில், அவர் தவறு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை திரும்பப் பெறவும் வழிகாட்டுதலை ஆர்பிஐ உருவாக்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x