Published : 25 Dec 2018 04:49 PM
Last Updated : 25 Dec 2018 04:49 PM

நாளையும் வங்கிகள் செயல்படாது: ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் முடங்கும்

9 வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாளை வேலை நிறுத்தம் நடைபெறுவதால் வங்கிகள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏடிஎம் நிரப்பும் பணிகளும் பாதிக்ககூடும் என தெரிகிறது.

ஊதிய உயர்வு, வங்கிகள் இணைப் பைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும்  வங்கி அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வாடிக்கையாளர்களுக்கான வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் வங்கி சேவைகள் பாதிப்படைந்தன.

இந்தநிலையில் 26-ம் தேதியான நாளை ஒன்பது வங்கிகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளையும் ஒன்றாக இணைக்கக் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த வங்கி இணைப்பைக் கண்டித்து வங்கிகள் அனைத்தும் நாளை வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. இதனால் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணிகள் பாதிக்கப்படும் என்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் தெரிகிறது.

இந்த வேலை நிறுத்தத்தில் 3.2 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிப் பணிகள் மீண்டும் பாதிக்கும் எனத் தெரிகிறது. வெள்ளிக்கிழமை (21-ம் தேதி) வங்கி அதிகாரிள் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்பட்டது. 22-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை விடுமுறை, 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

கடந்த 24-ம் தேதி மட்டுமே வங்கிகள் செயல்பட்டன. அதன்பின் 25-ம் தேதியான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை அரசு விடுமுறை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. நாளையும் 9 வங்கி யூனியன் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளதால் வங்கிகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களாகவே அடுத்தடுத்து வங்கிப் பணிகள் முடங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x