Published : 06 Dec 2018 08:15 PM
Last Updated : 06 Dec 2018 08:15 PM
ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை யூரோவில் அல்லாமல் இந்திய ரூபாயிலேயே செலுத்த ஈரானுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கடந்த நவமர் 5ம் தேதி அமெரிக்கா ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆனால் இந்தியா மற்றும் 7 நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்தது.
இந்நிலையில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் தேசிய ஈரானிய ஆயில் நிறுவனத்துக்கு யூகோ வங்கி மூலம் ரொக்கமாகவே பணத்தை இனி செலுத்துகிறது.
அமெரிக்கா விதித்தத் தடைகளை அடுத்து ஈரானுக்கு இந்தியா உணவு தானியங்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை மட்டும் ஏற்றுமதி செய்யலாம்.
இப்போதுள்ள 180 நாள் தடை விலக்கலில் இந்தியா நாளொன்றுக்கு 3 லட்சம் பீப்பாய்கள் கச்சாவை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யலாம். ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் 2வது பெரிய நாடு இந்தியா, முதலில் சீனா உள்ளது.
உலகின் 3வது பெரிய எண்ணைய் நுகரும் நாடான இந்தியா தன்னுடைய கச்சாத் தேவைகளில் 80% தேவைகளை இறக்குமதி மூலமே செய்கிறது. இராக், சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக ஈரானிலிருந்துதான் இந்தியா அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது.
இதற்கு முன்னதாக ஈரானுக்கு இந்தியா இறக்குமதிகளுக்கான தொகையை யூரோ மூலம்தான் செலுத்தி வந்தது. இதனை ஐரோப்பிய வங்கிகள் வழியாகச் செலுத்தி வந்தது, ஆனால் ட்ரம்ப் தடைக்குப் பிறகு நவம்பரில் இந்த வழிகள் அடைக்கப்பட்டன.
அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளில் ஐரோப்பிய யூனியன் இணைந்த முதல் சுற்று தடைகளின் போது இந்தியா துருக்கிய வங்கி மூலம் ஈரானுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி தொகையைச் செலுத்தி வந்தது.
நவம்பரில் ஈரானுக்குப் பணம் செலுத்தும் ஐரோப்பிய வழிகள் மூடப்பட்ட பிறகு கப்பல் நிறுவனங்களும் ஈரான் கச்சா எண்ணெயை சுமக்க மறுத்து விட்டது. இதனையடுத்து ஈரான் தன் சொந்தக் கப்பல் மூலம்தான் இந்தியாவுக்கு கச்சா ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்கு அந்நாட்டு காப்பீட்டு நிறுவனங்களும் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT