Published : 25 Sep 2018 03:07 PM
Last Updated : 25 Sep 2018 03:07 PM

ட்ரம்ப் உத்தரவை புறக்கணித்த சவுதி அரேபியா: கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத உச்சம்

ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சவுதி அரேபியா மற்றும் ரஷ்ய நாடுகள் புறக்கணித்துள்ளன. இதனால் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை இன்று பேரல் 81.48 டாலர்களாக உயர்ந்தது.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்தபோது, 2015-ம் ஆண்டில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரான் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

மேலும், ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சியாக, அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வர முடியாத சூழலில் அந்த இழப்பை ஈடுகட்ட, சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.

குறிப்பாக தனது மிகநெருங்கிய நட்பு நாடான சவுதி அரேபியா உடனடியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என அமெரிக்கா சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த வேண்டுகோளை சவுதி அரேபிய ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்வதால் தங்கள் கோரிக்கையை ஏற்று கச்சா எண்ணெய் விலையை குறைக்க உற்பத்தி நாடுகள் முன் வர வேண்டும் என ட்ரம்ப் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோக நாடுகளின் கூட்டமைப்பின் முடிவை இது பாதிக்கும் என்பதால் உற்பத்தியை அதிகரிக்க முடியாது என சவுதி அரேபியா மறுத்து விட்டது.

இதுபோல, ‘‘ஈரானின் கச்சா எண்ணெய் சந்தையில் தாராளமாக கிடைக்கும் சூழலில் அதனை தடுத்து அமெரிக்க விலை உயர்வுக்கு காரணமாக இருப்பது ஏன்’’ என ரஷ்யா கேள்வி எழுப்பியுள்ளது. இந்த இருநாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மறுத்து விட்ட நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் இன்று பேரல் ஒன்றின் விலை 81.48 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத ஒன்றாகும்.

ஈரானிடம் இருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை திட்டமிட்டபடி நவம்பருக்கு அமெரிக்கா தடுத்தால், அதன் விலை 100 டாலர்களுக்கும் அதிகமாக உயரும் என பெய்ரூட் கச்சா எண்ணெய் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x