Published : 21 Sep 2018 10:56 AM
Last Updated : 21 Sep 2018 10:56 AM

2 வாரங்களுக்கு பிறகு ‘நிமிர்ந்தது’ இந்திய ரூபாய் மதிப்பு

 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு இன்று சற்று அதிகரித்துள்ளது.

உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினைக் கண்டுள்ளன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் சரிவடைந்தது. இதுபோலவே துருக்கி நாணயமான லிரா உள்ளிட்டவையும் சரிவடைந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.

இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் பல நாட்களுக்கு பிறகு ரூபாய் மதிப்பு இன்று கணிசமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று காலை நேர வர்த்தகத்தில் 53 பைசா அதிகரித்து, 71.84 ரூபாயாக உயர்ந்தது. இந்த உயர்வு கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத உயர்வாகும். உலக அளவில் வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் டாலர்களை அதிகஅளவில் விற்பனை செய்ததால் அதன் மதிப்பு சரிந்து இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x